கொள்ளுத்தாத்தா முதல் கொள்ளுப்பேரன் வரை பணியாற்றும் சுமித்ரா மகாஜன்
டெல்லி: தனது கொள்ளுத்தாத்தாவுடன் பணியாற்றிய சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு இந்திய தேசிய லோக்தள கட்சி எம்.பி. துஷ்யந்த் வாழ்த்து தெரிவித்தது லோக்சபாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப்பேரன் துஷ்யந்த் (26). நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இவர் எம்.பியாக மக்களவைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
மிகவும் இளைய எம்.பிக்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்த நிலையில்தான் 71 வயதான சுமித்ரா மகாஜன் மக்களவை சபாநாயகராக நேற்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமித்ரா மகாஜன், தேவிலால் காலத்திலேயே எம்.பியாக பதவி வகித்தவர்.
தனது கொள்ளுத்தாத்தாவுடன் பணியாற்றிய, சுமித்ரா மகாஜன் அதன்பிறகு தனது தாத்தா மற்றும் தந்தையுடனும் பணியாற்றியுள்ளதை பெருமையுடன் துஷ்யந்த் நினைவு கூர்ந்தார். இப்போது நானும் சுமித்ரா மகாஜனுடன் பணியாற்றுவது பெருமையளிக்கிறது என்றார்.
இதுகுறித்து சுமித்ரா மகாஜன் கூறுகையில், எம்.பிக்கள் அவையில் நான் என்னை ஒரு பாட்டியாக கருதிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சுமித்ரா மகாஜனுக்கு, துஷ்யந்த் வாழ்த்துக்களை தெரிவித்ததை நாடாளுமன்ற சீனியர் எம்.பிக்கள் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கொள்ளுத்தாத்தா முதல் அவரது பேரன் வரையில் பணியாற்றிய பழுத்த அனுபவசாலி இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிக பொருத்தமே என்று சீனியர்கள் கமெண்ட் அடித்தனர்.