என்னை 'என்கவுண்ட்டரில் போட்டு தள்ளிடுவாங்க....' கதறும் ஹர்திக் படேல்!
அகமதாபாத்: 'எங்களுக்கு இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டை ஒழி" என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வரும் குஜராத்தின் ஹர்திக் படேல், தம்மை போலீசார் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுப் படுகொலை செய்துவிடுவார்களோ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லையெனில் இடஒதுக்கீடு முறையையே ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருபவர் ஹர்திக் படேல்.
அவர் கடந்த மாதம் 25-ந்தேதி அகமதாபாத் நகரில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான 4,200 போலீசார் மீதும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் எங்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்த ஹர்திக் பட்டேல் அதற்கான கெடு செப்டம்பர் 24-ந் தேதி எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆரவல்லி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்திய ஹர்திக் பட்டேலை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால் ஹர்திக் படேல் காரில் ஏறி தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார் என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே ஹர்திக் படேலை காணவில்லை; போலீசார்தான் கைது செய்து கஸ்டடியில் வைத்துள்ளனர்; அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று நள்ளிரவில் குஜராத் நீதிமன்றத்தை அவரது ஆதரவாளர்கள் நாடினர். இந்த புகாரை ஏற்று ஹர்திக் படேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென ஹர்திக் பட்டேல் நேற்று குஜராத் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:
ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பயாத் என்ற இடத்தில் என்னுடைய காரை சில நபர்கள் துரத்தினர். பிறகு அவர்கள் என்னைக் கடத்தி ஒரு காரில் ஒரு நாள் இரவு முழுதும் வைத்திருந்தனர்.
இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லையேல் அழித்து விடுவோம் என்றும் என்னை மிரட்டினர். என்னை மிரட்டிய அந்த நபர் இதுவே முதலும் கடைசியுமான எச்சரிக்கை என்றார். இனி ஒருமுறை கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் மக்களிடையே பேசுவதைப் பார்த்தால் என்னை அழித்து விடுவதாக மிரட்டினர்.
ஒரு இரவு முழுதும் என்னை மிரட்டிய பிறகு பயாத்திலிருந்து தாரங்தாரா தாலுக்காவில் கிராமம் ஒன்றில் என்னை விட்டுச் சென்றனர். அவர் யார் என்று தெரியவில்லை, போலீசா அல்லது வேறு நபரா என்று தெரியவில்லை, ஆனால் அவரிடம் துப்பாக்கி இருந்தது.
அவர் யார் என்பது எனக்கு தெரியவேண்டும், யாருடைய உத்தரவின் பேரில் அவர் என்னை ஒருநாள் இரவு முழுதும் பிடித்து வைத்திருந்தார் என்பதும் எனக்கு தெரிய வேண்டும். தற்போது என்னை ஒருநெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு ஹர்திக் படேல் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து குஜராத் நீதிமன்றத்தில் ஹர்திக் ஆதரவாளர்கள், என்கவுண்ட்டரில் ஹர்திக் படேலை போலீசார் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.