டிடிவி தினகரனின் 'புரோக்கர்’ சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் பறிமுதல்
தினகரனின் புரோக்கர் சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு: அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கு இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் நண்பரிடம் இருந்து 8 வெளிநாட்டு சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக கூறி தினகரனுக்கு புரோக்கராக செயல்பட்டு சிக்கியவர் சுகேஷ். தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சுகேஷ்.

இந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரசி சோதனை நடத்தினர். சுகேஷின் முக்கிய கூட்டாளி நவாஸை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 8 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இந்த சொகுசு கார்கள் சுகேஷூக்கு சொந்தமானவையா? அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சசிகலா குடும்பமும் சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. திவாகரனின் மகள் ராஜமாதங்கி பெயரில் இந்த கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications