ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாடு கூட்டணி உடைந்தது.. சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. இரு கட்சிகளும் வருகிற சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளன.
கூட்டணி முறிவு குறித்து காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் சோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். அதில், சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது தேசிய மாநாட்டுக் கட்சியின் முடிவாகும். இதை நான் 10 நாட்களுக்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்து விட்டேன்.
10 நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியைச் சந்தித்தபோது இதுவரை அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். தேசிய மாநாட்டுக் கட்சியின் முடிவையும் அவரிடம் தெரிவித்தேன். அதற்கான காரணங்களையும் அவரிடம் விவரித்தேன். இந்த முடிவை பகிரங்கமாக வெளியிட்டு நான் சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இதனால்தான் சோனியாவை நேரில் சந்தித்துத் தெரிவித்தேன் என்றார் உமர்.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் மாதத்தில் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.