பாஜகவுடன் கை கோர்க்க தயாராகிவிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்?
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் ஒரே பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இப்போது பாஜக அணியில் இடம்பெற பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது மத்திய அமைச்சரான பிரபுல் பட்டேல், பாஜகவுக்கு தாவுகிறார் என்ற செய்தி. ஆனால் பிரபுல் பட்டேல் இதனை திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பாஜக அணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெறக் கூடும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பாஜக வெல்லும்.. வலிமையான மத்திய அரசு
எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த பிரபுல் பட்டேல், பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். மத்தியில் வலிமையான நிலையான மத்திய அரசு அமைய வேண்டும் என்றார்.
பாஜகவும் அழைப்பு
இதே பாஜக அரசுக்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் தயார் என்பதைத்தான் சூசகமாக பிரபுல் பட்டேல் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பாரதிய ஜனதா கட்சியும் கூட தேச நலனில் அக்கறை உள்ள கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என அழைப்பு விடுத்துள்ளது.
பவார் மறுப்பு
ஆனால் நிச்சயமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருபோதும் இணையமாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
மகாராஷ்டிராவில் சிக்கல்?
அப்படி பாஜக அணியில் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் புயலைக் கிளப்பும் வாய்ப்பும் இருக்கிறது. 1999ஆம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.