கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர அதிரடி நடவடிக்கை 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
நாடு முழுவதும் உள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்ததுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்ததுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 9,334 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது கட்டமாக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கறுப்புப்பணத்தை முடக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ரூ. 9,334 கோடி கறுப்புப்பணம்
இந்நிலையில் பிப்ரவரி 28-ந்தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத பணம் ரூ.9334 கோடி இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்தனர். இது தொடர்பாக 17.92 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தியது. இவர்களில் 9.46 லட்சம் பேர் முறையாக விளக்கம் அளித்தனர். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
60 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் இரண்டாவது கட்ட நடவடிக்கையை தற்போது வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிக சொத்து வாங்கியவர்கள்
இவர்களில் 1,300 பேர் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பிறகு அதிக அளவில் பண பரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் பேர் அதிக அளவில் சொத்துகள் வாங்கியதாக வருமான வரித்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உடனே பதில் அளிக்க உத்தரவு
இவர்கள் அனைவரும் உடனே பதில் அளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.