ஊடகங்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது.. துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்
இந்தியாவில் செயல்படும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது கூடாது என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஜனநாயக நாட்டுக்கு, ஊடகங்களின் செயல்பாடு மிகவும் அவசியம். ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது' என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு 1938ம் ஆண்டில் தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக, பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் மீது, சு.சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டில், தன் செயல்பாடுகளை, அந்த பத்திரிகை நிர்வாகம் நிறுத்தியது. இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்த பத்திரிகையை மீண்டும் வெளியிட, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு மீண்டும் தொடங்கியது.
பெங்களூரில் நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்ட்ஸ் பத்திரிகையை வெளியிட, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
அப்போது துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசுகையில், " நாட்டின் விடுதலைக்காக 'நேஷனல் ஹெரால்டு' நாளிதழ் முக்கிய பங்காற்றியது. ஜனநாயக நாட்டிற்கு, ஊடகம் மிகவும் அவசியம். யாரும் ஊடகத்தை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது." என்று கூறினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, " நாட்டின் பாதுகாப்புக்காக, இந்திய ராணுவத்தினர், பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்களை காங்கிரசார், தவறாக பேசக்கூடாது. விவசாயிகள், ஏழைகள், சிறுபான்மையினரை, பாஜக கண்டுகொள்ளவில்லை. ஆண்டுதோறும், இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறிய மோடி அரசு, எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தின் பெயர்களை மாற்றி பாஜக அரசு செயல்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications