இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை ரத்து- அஜித் தோவல் திட்டவட்டம்
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்களிடையே நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை மறுதேதியிடப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அஜித் தோவல் அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், "பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அதுவரையில் இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது. தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை குறித்த முடிவு எட்டப்படும். எனவே, வருகின்ற 15 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த அமைதிப் பேச்சு வார்த்தை ரத்து செய்யப்படுகிறது" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புபடை வீரர்கள் தரப்பில் 7 பேர் பலியானார்கள். இதையடுத்து வேறு தீவிரவாதிகள் யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்று பதான்கோட் விமானப் படை தளம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் 15ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தெரிவித்துள்ளார்.