பொது இடத்தில் உச்சா… 109 பேரை பிடித்து ஜெயிலில் தள்ளிய ஆக்ரா போலீஸ்
ஆக்ரா: பொது இடத்தை அசிங்கப்படுத்தும் வகையில் சிறுநீர் கழித்த 109 பேரை பிடித்து சிறையில் தள்ளியுள்ளனர் ஆக்ரா ரயில்வே போலீசார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல்முறையாக பொது இடங்களை அசுத்தப்படுத்துவோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், குறிப்பாக, ரயில் பிளாட்பாரங்கள், டிராக் பார்க்கிங் உள்ளிட்ட பொது இடங்களில் 48 மணிநேரத்திற்கும் மேலாக ஆக்ரா டிவிஷனை சேர்ந்த 12 ரயில் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நடமாட்டம் மிகுந்த இடங்களில் சிறுநீர் கழித்த 109 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு 24 மணிநேர சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அபராதம் செலுத்தப்பட்டவுடன் விடுவிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி ரெய்டில் பிடிபடுபவர்கள் போலீஸ் சட்டம் பிரிவு 34-ன் கீழ் கைது செய்யப்படுவார்கள். அதாவது சாலைகள், பொது இடங்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் செய்யக்கூடாதவற்றை செய்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், பான் மசாலா போன்ற எச்சிலை உமிழ்தல், மது அருந்துதல் உள்ளிட்டவைக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தில் விவேக், சிறுநீர் கழித்தால் போலீஸ் பிடித்துச் செல்வார்கள் என்று எழுதியிருப்பதைப் பார்த்து, கீழே வீணா போறதை போலீஸ் பிடிச்சா பிடிக்கட்டும் என்று சிறுநீர் கழிப்பார். அப்போது போலீசார் கைது செய்து மொபைல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி அபராதம் விதிப்பார்கள். இப்போதோ சிறையில் அடைக்கின்றனர்.
பொது இடத்தில் மக்களுக்குத் தேவையான கழிப்பிட வசதிகளை செய்திருந்தால் அவர்கள் ஏன் மக்கள் பார்க்கும் வகையில் அசிங்கம் செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சட்டங்கள் போட்டு தண்டனை வழங்கும் முன்னர் அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்யவேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாகும்.












Click it and Unblock the Notifications