கறுப்பு பணம்: இந்தியர்கள் பட்டியலை தர மறுத்த சுவிஸ்- எச்சரித்த ப.சிதம்பரம்
டெல்லி: கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அளிக்க சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது. இது தொடர்பாக சுவிட்சர்லாந்தை எச்சரித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியர்கள் பலர் கறுப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அதை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் தெரிவித்தன. தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் விவரத்தை சுவிட்சர்லாந்து தெரிவிக்காது என்ற தைரியத்தில் தான் பலர் அங்கு கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே ஒரு ஒப்பந்தம் கையெத்தானது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அளிக்குமாறு இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அந்நாட்டை கேட்டுக் கொண்டனர். ஆனால் பட்டியலை அளிக்க சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது.
இதையடுத்து சுவிட்சர்லாந்து நிதி அமைச்சருக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதினார். அதில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் சுவிட்சர்லாந்து ஒத்துழையாத நாடு என்று அறிவிப்பதோடு இது குறித்து ஜி20 நாடுகளின் அமைப்பை நாட வேண்டி இருக்கும் என்று அவர் அதில் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.