சுகோய், மிராஜ்.. தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்.. காஷ்மீரில் விமானப் படை தளபதி திடீர் ஆய்வு
ஸ்ரீநகர்: இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு ரகசியமாக சென்று ஆய்வு நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானப் படை தளபதி 2 நாட்கள் ஆய்வு நடத்தியுள்ள தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியா - சீனா எல்லையில் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சீன ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 76 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை- ஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்: பிரதமர் மோடி
தயார் நிலை
இதையடுத்து கடும் பதற்றம் ஏற்பட்டதால், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் மற்றும் ராணுவ தலைமை தளபதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது.
விமானப் படை தளபதி
இந்நிலையில் இந்திய விமானப் படை தளபதி பதவுரியா கடந்த இரண்டு நாட்களாக காஷ்மீரின் லே, ஸ்ரீநகர் பகுதிக்கு ரகசியமாக வந்ததாகவும், அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
போர் விமானங்கள்
சுகோய்-30எம்கேஐ, மிராஜ் 2000 மற்றும் ஜாக்குவார் போன்ற அதி நவீன போர் விமானங்கள் சீன எல்லைக்கு வெகு தொலைவில் தயார் நிலையில் உள்ளன. உத்தரவு வந்ததும் பறந்து செல்லும் தாக்கும் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பச்சே ஹெலிகாப்டரும் தயார் நிலையில் உள்ளது.
கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுகள்
இந்திய போர் விமானங்கள் காஷ்மீர் மற்றும் லடாக் வான் எல்லையில் பறப்பதை பார்க்க முடிந்ததாக பொதுமக்கள் கூறும் நிலையில், இந்திய - சீன எல்லையில் விமானப் படையினரை தயார் நிலையில் வைப்பதற்காக விமானப்படை தளபதி ஆய்வு நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
இதனிடையே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இதற்கும் சீன பிரச்சினைக்கும் தொடர்பில்லை என ராணுவம் கூறியுள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதும், இந்தியா பதிலடி கொடுப்பதும் ஏற்கனவே நடந்ததுதான் என்று, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.