உணவு கூட கிடைக்காமல் ஈராக்கில் அவதிப்படும் இந்தியர்கள்- தப்பி வந்தவர்கள் அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அந்நாட்டு அரசும் இந்திய தூதரகமும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். பல முக்கிய நகரங்கள் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகி உள்ளது.
இதனால் அங்கு பணிபுரிந்த 18 ஆயிரம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கெனவே 39 இந்தியர்கள் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். 40 செவிலியர்கள் திக்ரீத் நகரில் தவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர உதவி மையத்தை மத்திய அரசு திறந்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியையும் அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் முகமது சையது அன்சாரி என்பவர் கத்தார் வழியாக இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அவர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கில் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. மிக விரைவில் இந்தியர்களை அங்கிருந்து அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மற்றொரு இந்தியரான முகமது மெக்தாப் என்பவர், ஈராக்கில் நிலைமை வெகுமோசமாக உள்ளது. இந்திய தூதரகத்தினர் யாருமே எங்களுக்கு உதவி செய்ய தயாராக இல்லை. உணவு உட்பட எந்த வசதியுமே செய்து தரவில்லை. எங்களுடன் போனில் பேசக் கூட அவர்கள் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.