இந்தியா-ரஷ்யா கூட்டு விமானப்படை பயிற்சி.. பஞ்சாப்பில் தொடங்கியது!
டெல்லி: இந்தியா-ரஷ்ய விமானப்படை வீரர்கள் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ரஷ்ய குழு இந்தியா வந்துள்ளது.
இந்தியா-ரஷ்யா நடுவேயான ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், இந்திய விமானப்படை வீரர்கள் ரஷ்யா சென்று அங்கு அந்த நாட்டு பாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் இரு நாட்டு படைகளும் கூட்டு பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வரும் 28ம்தேதிவரை ரஷ்ய விமானப்படையினர் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் என் லியாப்கின் தலைமையிலான வீரர்கள் பஞ்சாப்பிலுள்ள ஹல்வாரா விமானப் படை தளத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த பயிற்சியின்போது இந்தியாவின் சு-30 எம்கேஐ, எம்ஐ-17 மற்றும் எம்ஐ-35 ரக விமானங்களை ரஷ்ய அதிகாரிகள் இயங்கி பயிற்சி மேற்கொள்வார்கள். இப்பயிற்சிக்கு ஏவியா-இந்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டு பயிற்சி இரு நாடுகளுக்கிடையேயான விமானப்படை உறவை மேலும் மேம்படுத்தும் என்று அறிக்கையொன்றில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.