பணவீக்கமும், ஊழல் குற்றச்சாட்டுக்களும் விசுவரூபம் எடுத்து விட்டன!- சோனியா பேச்சு
ரேபரேலி: பணவீக்கமும் ஊழல் குற்றச்சாட்டுகளும் வேலையின்மையும் நாட்டில் அதிகரித்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தான் வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு பைரோஸ் காந்தி கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:
"பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நாடெங்கும் தொண்டர்கள் மிக கடினமாக உழைத்தார்கள். ஆனால் மிகக் குறைந்த இடங்களில்தான் நமக்கு வெற்றி கிடைத்தது. எனக்கு இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இழந்துள்ள பெருமையை நான் மீட்டே தீருவேன். இதற்கான பணியில் நான் முன் நின்று செயல்படப் போகிறேன். காங்கிரசின் பெருமையை திரும்பப் பெறும் வரை நாம் ஓய்வு பெறக் கூடாது.
காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அது பற்றி நான் ஆய்வு செய்து வருகிறேன். குறைகளை களைந்து கட்சியை செம்மைப்படுத்த நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி எந்தெந்த பகுதிகளில் தோல்வியைத் தழுவியதோ, அங்கெல்லாம் நாம் மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். காங்கிரசின் அடிப்படை கொள்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்சியை மீட்டெடுக்கும் இந்த பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
நாம் துடிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சட்ட சபை, நகரசபை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் உள்ள மக்களின் பிரச்சினைகளை எழுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரசார் போராட வேண்டும்.
நாம் மேற்கொள்ள வேண்டிய இந்த பாதை சற்று கடினமானதுதான். என்றாலும் நாம் கடுமையாக கட்சிக்காக பாடுபட வேண்டும்.
நாடெங்கும் காங்கிரஸ்காரர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். இந்த இலக்கில் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் நான் நாடெங்கும் தேர்தல் பிரசாரம் செய்ய சென்றதால், உங்களை பார்க்க இங்கு வர இயலவில்லை. எனக்கு பதில் என் மகள் பிரியங்கா உங்களைச் சந்தித்துப் பேசினாள். எதிர்காலத்திலும் அவள் உங்களுக்காக சேவை செய்வாள்.
தேர்தல் சமயத்தில் பாரதீய ஜனதா கட்சி உங்களுக்கு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தது. அந்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்கள் பணியாற்றுவதை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கண்காணிப்போம்.
வாக்குறுதிகளை கொடுப்பது எளிது. ஆனால் அவற்றை நிறைவேற்றுவது மிகவும் கடினம். எனவே இந்த ஆட்சி பற்றி மக்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு எத்தனையோ நல்ல பணிகளை செய்துள்ளோம். ஆனால் அந்த நல்லாட்சி பற்றி மக்களிடம் உரிய முறையில் நாங்கள் சொல்ல தவறி விட்டோம்.
பணவீக்கமும், ஊழல் குற்றச்சாட்டுக்களும் வேலையின்மையும் விசுவரூபம் எடுத்து விட்டன. அவற்றைக் கட்டுப்படுத்த நாம் முயன்றோம். ஆனால் நமக்கு அவகாசம் போதவில்லை. இதை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். எங்கள் குரல் அமுங்கி போய் விட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்களையும் மீறி காங்கிரசை நம்பி 11 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் மிகவும் வீழ்ந்துள்ளது. இந்த மாநிலங்களில் பூத் கமிட்டி அளவில் இருந்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதுள்ளது. இந்த முயற்சியில் வெற்றி பெற்று நமது இலக்கை நிச்சயம் நாம் எட்டுவோம்.
இந்த போராட்டத்தில் நான் எப்போதும் உங்களுடனே இருப்பேன். இனி அடிக்கடி நான் உங்களுடன் தொடர்பில் இருப்பேன்," என்று பேசினார்.