சன்னி, குர்து பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசு அமைக்க முடியாது: ஈராக் பிரதமர் மாலிக் திட்டவட்டம்!
பாக்தாத்: அமெரிக்காவின் விருப்பப்படி ஷியா, சன்னி மற்றும் குர்து இன மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசு அமைக்க முடியாது என்று ஈராக் அதிபர் மாலிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் கை ஓங்கி இருக்கிறது. சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ்., அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய பிரதமர் மாலிக் அரசை அகற்றிவிட்டு அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கக் கூடிய அரசை அமைத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முனைப்பு காட்டியது. இது குறித்து ஈராக் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் இதை ஈராக் பிரதமர் மாலிக் நிராகரித்துள்ளார். அப்படியான ஒரு அரசு அமைப்பது என்பது நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; கடந்த தேர்தலில் மக்கள் அளித்த முடிவுகளுக்கும் எதிரானது என்று மாலிக் கூறியுள்ளார்.
இதனால் மாலிக் தலைமையிலான அரசை அமெரிக்கா அகற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.