சுரிந்தர் கோலியை முதன்முறையாக சிறையில் சந்தித்த தாய்! தூக்கில் போட்டால் வலிக்குமா என்று கேட்ட கோலி
டெல்லி: நொய்டாவில், சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுரிந்தர் கோலியை அவரது தாயார் 8 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக சிறையில் சந்தித்து பேசினார். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பணக்காரர் மட்டும் தப்பியது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா அடுத்த, நிதாரி பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு சிறுமி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, சுரிந்தர் கோலி என்பவர் சிறுமியைக் கொன்றதும், இதேபோல் 2005 முதல் 2006க்கு இடைப்பட்ட காலத்தில் மேலும் பல சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
சுரிந்தர் கைது
கொலை செய்த சிறுமிகளை தனக்கு வேலை அளித்திருந்த தொழிலதிபர் மோனிந்தர் சிங் என்பவரின் பண்ணை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மோனிந்தர் சிங் மற்றும் அவரின் வேலைக்காரரான சுரிந்தர் சிங் கோலி ஆகிய இருவரும், 16க்கும் மேற்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை அழித்ததாக கைது செய்யப்பட்டனர்.
முதன்முறையாக தாய் சந்திப்பு
இந்த வழக்கில் சுரிந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மோனிந்தர் சிங்கிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் தப்பியுள்ளார். இந்நிலையில் 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தனது மகன் சுரிந்தரை, முதன்முறையாக நேற்று அவரது தாயான குந்தி தேவிசந்தித்து 50 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.
பலிகடா
மகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் அவனை சந்திக்க ஆசை கொண்டு குந்தி தேவி, சிறைக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. மகனுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் குந்தி கூறியதாவது: சுரிந்தர் ஏழை என்பதால் இந்த வழக்கில் பலியாடாக்கப்பட்டுள்ளார்.
மோனிந்தர் எப்படி விடுதலையானார்
கொலை வழக்கில் மோனிந்தர் சிங் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தும் போலீசார் அவரை தப்பவிட்டனர். இதனால்தான் அலகாபாத் கோர்ட் அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. போலீசார் மெத்தனமாக நடந்து கொள்ளகாரணம், மோனிந்தர் சிங் பணக்காரர் என்பதுதான். மோனிந்தர் சிங்கிற்கு உதவி செய்த சுரிந்தருக்கு தூக்கு எனும்போது முக்கிய குற்றவாளி மோனிந்தர் எப்படி விடுதலையாகலாம்.
ஏழைகள் என்பதாலா
அதிகாரம் படைத்தவர்களால் எனது மகன் பலி கடாவாக்கப்பட்டுள்ளார். சுரிந்தர் தூக்கில் தொங்க வேண்டும் என்றால் மோனிந்தர் சிங்கும் தூக்கில் தொங்க வேண்டும். பணக்காரர்கள் தப்பிக்க, ஏழைகள் தூக்கில் தொங்குவது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. இவ்வாறு குந்தி தேவி தெரிவித்தார்.
வலிக்குமா
சுரிந்தர் கோலி அடைக்கப்பட்டுள்ள மீரட் சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் ரிஸ்வி கூறுகையில், "தூக்கில் போட வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது முதல் சுரிந்தர் கோலி கவலையில் ஆழ்ந்துள்ளார். தூக்கில் தொங்க விடும்போது வலிக்குமா, எவ்வளவு நேரம் தொங்க விடுவீர்கள் என்று சிறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டுள்ளார்.
கீதை வாசிப்பு
மரண பயத்தில் இருந்து வெளியேவர, சமீப காலமாக சுரிந்தர் கோலி, பகவத் கீதை படிக்க ஆரம்பித்துள்ளார். ஹனுமார் பாடல்களை கேட்கிறார். எப்போதுமே அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்ட சுரிந்தர் கோலி இப்போதுதான் அனைவரிடமும் பேச ஆரம்பித்துள்ளார். குறிப்பாக தாயை பார்த்த பிறகு அவரது நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிகிறது" என்றார்.