இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் ஆவணங்கள் மாயம்: விசாரணை அறிக்கையில் தகவல்
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் ஆவணங்கள் மாயமாகி உள்ளது உண்மைதான் என்று விசாரணைக் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு குஜராத்தின் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்ததாகக் கூறி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரை மாநில காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இது போலியான என்கவுன்ட்டர் என சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. பின்னர், அதே அமைச்சகம் தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையானது முதலாம் அறிக்கையுடன் முரண்பட்டதாக இருந்தது.
முதலாவது குற்றப்பத்திரிகையில் இஷ்ரத் ஜஹான் ஒரு பயங்கரவாதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், 2-வது குற்றப்பத்திரிகையில் அந்தத் தகவல் திருத்தப்பட்டு அவர் ஒரு அப்பாவி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த 2 குற்றப்பத்திரிகைகளும் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்தக் குற்றப்பத்திரிகைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த ஆவணங்கள் மாயமானதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவர் தனது விசாரணை அறிக்கையை உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹரிஷியிடம் தாக்கல் செய்துள்ளார்.
அதில், இஷ்ரத் ஜஹான் தொடர்பான ஆவணங்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 முதல் 28 வரையிலான நாட்களில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அல்லது தவறவிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆவணங்கள் மாயமான காலகட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஆனால் அவரது பெயரையோ அல்லது வேறு நபர்களின் பெயர்களையோ ஆவணங்கள் மாயமானதற்கு காரணமானவர்கள் என விசாரணைக் குழு குறிப்பிடவில்லை.
மேலும் மாயமானதாகக் கருதப்படும் 5 ஆவணங்களில் ஒரு ஆவணம் மட்டும் ஹார்ட் டிஸ்க் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் முன்னாள் செயலாளர் ஜி.கே.பிள்ளை உள்பட இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் 11 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.