இஸ்ரோவுக்கு 'அமைதிக்கான காந்தி விருது'..பிரணாப் முகர்ஜி வழங்கினார்!
டெல்லி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு 2014ம் ஆண்டின் அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவரிடமிருந்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சார்ந்த சேவைகளில் இந்தியாவின் புகழை உலகளவில் உயர்த்தியது இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ. எனவே, இஸ்ரோவின் பணிகளைப் பாராட்டி கடந்தாண்டிற்கான ‘அமைதிக்கான காந்தி விருது' வழங்கப் பட்டது.
இந்த விருது வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதோடு, ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றுக் கொண்டார் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்.
அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
இஸ்ரோ மிகச் சிறிய அளவில் துவக்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரிய 6 விண்வெளி ஆய்வு அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மிகக் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' செயற்கைக் கோளை அனுப்பி, முதல் முயற்சியிலேயே அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது. இந்திய மக்களின் அடிப்படை தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்த திட்டங்களை வடிவமைத்து சீரிய முறையில் இஸ்ரோ செயலாற்றி வருகிறது' எனப் பாராட்டினார்.
இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக மூத்த தலைவைர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.