நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.550 கோடி கருப்பு பணம் சிக்கியது !
நாடு முழுவதும் வருமான வரித்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ550 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.550 கோடி கணக்கில் வராத கருப்பு பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அவர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு பணம் பதுக்கியவர்களின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் ரூபாய் நோட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் 28 -ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4172 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.550 கோடியில் ரூ.105 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகும். ரூ.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் சோதனை அடிப்படையில் 5000 பேருக்கு தங்கள் வருமானம் குறித்து விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications