கருப்பு பணம் பதுக்கலா?.. சித்தராமையாவுக்கு நெருங்கிய அதிகாரி, வங்கி மேனேஜர் வீடுகளில் ஐடி ரெய்டு!
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருங்கமான அரசு அதிகாரி, வங்கி மேலாளர் உட்பட பெங்களூரிலுள்ள சில அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
வருமான வரித்துறை நடவடிக்கை, கர்நாடக அரசு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை கண்டறியவே இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை மோடி கடந்த 8ம் தேதி வெளியிட்ட பிறகு கருப்பு பண முதலைகள், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமாக பணத்தை பினாமி பெயர்களில் வங்கிகளில் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது.

வங்கி மேனேஜர்கள் தர்பார்
இதேபோல வங்கி மேனேஜர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையும் நடக்கிறது. வங்கி ஜன்னல் வழியாக ரூபாய் நோட்டு கட்டுக்களை மேனேஜர் தூக்கி போட்ட சம்பவம் வீடியோவாக வெளியே வந்து பரபரப்பை கிளப்பியிருந்ததை நாடு பார்த்தது. பல இடங்களில் வங்கி மேலாளர்களுக்கு இப்போது டிமாண்டோ, டிமாண்ட்.

பெங்களூரில் சோதனை
இதை கருத்தில் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று பெங்களூரில் பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். ஐஏஎஸ் அதிகாரி மோகன் சக்கரவர்த்தி, தனலட்சுமி வங்கியின் மேலாளர் உமா சங்கர், காவிரி வாரிய தலைமை இன்ஜினியர் சிக்கராயப்பா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடந்துள்ளன.

முதல்வருக்கு நெருக்கம்
இதில் சிக்கராயப்பா, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். அவரது வீட்டில் கருப்பு பணம் இருக்கலாம் என்ற தகவலின்பேரில் ரெய்டு நடந்துள்ளது. இந்த ரெய்டின்போது, ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தராமையா விமர்சனம்
மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை, சித்தராமையா சில தினங்கள் முன்புதான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மோடி பிரதமராகியிராவிட்டால், பாஜக தலைவர் அமித் ஷா சிறையில் இருந்திருப்பார் என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில் சித்தராமையாவுக்கு வேண்டியவர் வீட்டில் நடந்த ரெய்டு கர்நாடக அரசியல் தரப்பில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications