பயங்கர கலவரம்.. நல்லவேளை அதிர்ஷ்டவசமா தப்பிச்சுட்டேன்.. அமித் ஷா பேச்சு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தேன் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 9 மக்களவைத் தொகுதிக்கு, 7 வது கட்டமாக வருகிற ஞாயிற்று கிழமை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதே நேரம், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத விதமாக, மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
சீண்ட கூடாத இடத்தில் கை வைத்துவிட்டார் அமித் ஷா.. சும்மா விட மாட்டேன்.. பொங்கும் மமதா!
கலவரம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு என கண்ட இடமெல்லாம், மோதல்கள் வெடிக்கின்றன. அந்த வகையில், கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். அப்போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு, சிலைகள் உடைப்பு என தொடர்ந்ததால், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
போலீசார் குவிப்பு
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாறி, மாறி பரஸ்பர புகார் அளித்தனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது 2 பிரிவுகளில் கீழ் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவர சம்பவத்தால், கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஜிதேந்திர சிங் மற்றும் விஜய் கோயல் ஆகியோர் டெல்லியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
விசாரணை நடத்துக
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையேயான கலவரத்தின் போது, வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, சிபிஐ (மார்க்சிஸ்ட்) கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவின் பேரணியின் போது, வன்முறை எப்படி வெடித்தது என்பதைக் கண்டறிய, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.