புல்லட் ரயிலால் ஜப்பானுக்குத்தான் லாபம்.. அதிர்ச்சி ஆய்வு.. அப்ப 'மேக் இன் இந்தியா' நிலைமை?
மும்பைக்கும் அஹமதாபத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டம் மூலம் ஜப்பான் அதிகமாக பலன் அடையும் என்று கூறப்படுகிறது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 வருடங்களாக அதிகம் கேட்கும் ஆதார், தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, யோகா போன்ற வார்த்தைகளுக்கு அடுத்து புல்லட் ரயில் என்ற வார்த்தைக்கும் முக்கிய இடம் இருக்கிறது. அந்த அளவிற்கு அரசு புல்லட் ரயில் குறித்து பேசி இருக்கிறது.
இதெல்லாம் ஒரு ஆடம்பரம் என்று புல்லட் ரயில் குறித்து மோடியே மேடையில் பேசி இருந்தார். ஆனாலும் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த வேலை வாய்ப்பு உருவாகாது என்று கூறப்படுகிறது. எல்லா வேலையும் ஜப்பான் நாட்டு மக்களுக்கே செல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
புல்லட் ரயில்
இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபத்துக்கும் இடையில் இயக்கப்படும். 1.10 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
திட்டம்
இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவான மேக் இன் இந்தியாவிற்கு வலு சேர்க்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புல்லட் ரயிலின் பாகங்கள் தயாரிக்கப்படும் போது இந்திய இளைஞர்கள் வேலை பெறுவார்கள் என்று கூறப்பட்டது. மேலும் நிறைய சம்பளமும் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஜப்பானுக்கு பலன்
ஆனால் இந்த திட்டம் மூலம் ஜப்பானுக்குத்தான் பலன் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இருக்கும் நிறுவனங்கள்தான் 70 சதவிகித புல்லட் ரயில் பாகங்களை உற்பத்தி செய்யும். இதனால் இந்தியர்களுக்கு உண்டாகும் வேலை எல்லாம் அங்கே சென்று விடும்.
காரணம் என்ன
இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களை ஜப்பான் புல்லட் நிர்வாகம் நம்பவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இந்தியர்களிடம் வேலையை கொடுத்தால் விரைந்து முடிக்க மாட்டார்கள் என்று கூறி ஜப்பான் நாட்டு பணியாளர்களிடம் வேலையை ஒப்படைக்க முடிவாகி இருக்கிறது. இதனால் ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன் உலக வாங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகில் தொழில் செய்ய ஏற்ற நல்ல இடங்களை பட்டியலிட்டது. இதில் 190 நாடுகளில் இந்தியாவிற்கு 100வது இடம் மட்டுமே கிடைத்தது. ஜப்பான் புல்லட் ரயில் நிர்வாகம் தற்போது இதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதனால் இந்தியர்களின் வேலை கேள்வி குறியாகி இருக்கிறது.
ஒப்பந்தம்
ஜப்பானில் இருக்கும் நிப்பான் நிறுவனமும் இந்தியாவில் இருக்கும் ஜிண்டால் நிறுவனம் இணைந்து இந்த பணியை தொடங்கலாம் என்று இந்தியா யோசனை கூறியது. ஆனால் ஜப்பான் கேட்ட தரம் எதுவும் ஜிண்டால் நிறுவனத்திடம் இல்லை என்று ஒப்பந்தம் செய்யப்படாமல் போனது. எனவே மேக் இன் இந்தியா தற்போது முழுக்க முழுக்க மேக் இன் ஜப்பானாக மாறியுள்ளது.
பிரச்சனை
ஏற்கனவே இதில் ஒரு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அஹமதாபாத்துக்கும், மும்பைக்கும் இடையில் ஓடும் ரயில்கள் காலியாக செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்காரணமாக ரயில்வே துறைக்கு நிறைய நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே புல்லட் ரயிலும் நஷ்டமாக ஓடும் என்றும் கூறப்பட்டுள்ளது.