புஜம் காட்டும் சாதி பலம்.. கனவு தகர்ந்து விடுமா.. ராஜஸ்தானில் தவிக்கும் பாஜக
ஜெய்ப்பூர்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்க.. சாதிய அமைப்புகளால் தமது வெற்றி தகர்ந்து விடுமோ என்று தவிக்கும் நிலைக்கு ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மிகவும் நம்பி கொண்டிருக்கும் ராஜஸ்தான் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் சின்னத்தை காட்டி விடுமோ (அதாங்க... கை சின்னம்) என்று மிகுந்த யோசனையில் இருக்கிறது பாஜக.
இப்போதைக்கு அங்க நிலைமை அப்படி தான் இருக்கு. காரணம் அங்கு ஜாட் மற்றும் ராஜ்புத் சமுதாயத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக பதிவாகியிருக்குமோ என்ற அச்சம்தான்.
தவிக்கும் பாஜக
மாநிலத்தின் வெற்றியை நிர்ணயிப்பதில் ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிய பலம் கோலோச்சி வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 120 தொகுதிகளில் ராஜபுத்திர வம்சத்தினரும். ஜாட் அமைப்பினரும் பெரும்பான்மையாக உள்ளனர். வெற்றி. தோல்வியை முடிவு செய்யும் இந்த இரு சமுதாயத்தினரும் பாஜகவுக்கு எதிரான நிலையில் இருக்கிறார்கள்.
ஒப்புக் கொண்ட அமைப்புகள்
அதிலும், மாநிலத்தின் மிகப்பெரிய அமைப்பான ஸ்ரீராஜ்புத்ர சபையினர் மிக தெளிவாக பாஜக எதிர்ப்பு நிலையில் மிக தீவிரமாக உள்ளனர், அவர்கள் தவிர, கர்ணி சேனா அமைப்பின் உறுதியான எதிர்ப்பு நிலை பாஜகவை தலை சுற்ற வைக்கிறது. தாமரையை ஆதரித்தது தவறு என்ற முழக்கத்துடன் அவர்கள் தமது சாதிய அமைப்புகளை திரட்டி, மாநில மக்களுக்கு அழைப்பும் விடுக்க கிட்டத்தட்ட கன்னத்தில் கை வைக்கும் நிலை தான் பாஜகவுக்கு.
காத்திருக்கும் பாஜக
ஏற்கனவே இருக்கிற சிக்கல் போதாதா.. என்றிருக்கும் நிலையில், இம்முறை தமது சமுதாய வாக்குகள் காங்கிரசுக்கு தான் என ஜாட் மகாசபையின் தலைவர் ராஜாராம் அறிவித்திருக்கிறார். அதுவும் பாஜகவுக்கு சாரிடான் மாத்திரை எங்கே என்று தேட வைத்திருக்கிறது. ஆனால், அந்த அமைப்பில் இளையோர், முதியோர் என இரு பிரிவாக வாக்குகள் சிதறும் நிலை உள்ளது.
சிதறும் வாக்குகள்
இளையோர் தரப்பு, ராஸ்டிரிய லோக் தந்திரிக் கட்சிக்கும், முதியோர் பாஜக, காங்கிரஸ் என சரி சமமாக ஆதரவு அளித்துள்ளதால், வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. (ஆனால், ஜாட் அமைப்பினர் ஆதரவு தமக்கு தான் என்று பாஜக அறிவித்துள்ளது தனிக்கதை).
கிரிராஜ் அறிவிப்பு
ராஜ்நாத் சிங் போன்ற முக்கிய தலைவர்களுக்கு சீட் கொடுக்காமல் பாஜக ஏமாற்றியதாக ஸ்ரீராஜ்புத் சபையின் தலைவர் கிரிராஜ் அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசு துணை தலைவர் பைரோன் சிங் செகாவத் மற்றும் அவரது குடும்பத்துக்கு சீட் தர மறுத்ததை நினைவுபடுத்தியுள்ளார்.
நம்பிக்கையில் பாஜக
ராஜபுத்ர வம்சத்தில் வாக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு அந்த சமுதாய மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. பாஜகவின் தேர்தல் குழுவில் கஜேந்திர சிங்கை தலைவராக நியமித்தும்... ஒரு மாயாஜாலமும் நடக்கவில்லை.
ஏக தேசமாக, மீனா அமைப்பினர் ஆதரவு, வழக்கம் போல காங்கிரஸ் எதிர்ப்பு நிலை தம்மை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருக்கிறது பாஜக.