சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை...சசிகலாவின் சந்தோசத்தை பறித்த சுப்ரீம் கோர்ட்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி மிகமுக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது
டெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று காலை மிகமுக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. நான்கு பேரும் குற்றவாளிகள்தான் என்றும் நான்கு ஆண்டு சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் என நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை நான்கு வகையாக தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால் ஒரே ஒரு தீர்ப்பை வழங்கி குன்காவின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வா ராய் அமர்வு.
சசிகலாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
குன்ஹா தீர்ப்பு
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.
உச்சநீதிமன்றம் விசாரணை
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.
தீர்ப்பு எப்படி
1. கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புபடி அவர்கள் விடுதலை செய்யப்படலாம். 2. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்படலாம். 3.கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தலாம். 4. மீண்டும் கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கோ, சிறப்பு நீதிமன்றத்திற்கோ வழக்கை மறு விசாரணைக்கு மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கீழ்கோட்டு வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சசிகலாவின் தலையெழுத்து
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.
தண்டனை, அபராதம்
ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை எனவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை தண்டனை உறுதியாக வாய்ப்பு
சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதோடு விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். நால்வரும் உடனடியாக சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் ஆசை
4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் சசிகலா 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு சாவு மணி அடித்துள்ளது.
சந்தோசத்தை பறித்த சுப்ரீம் கோர்ட்
கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் தங்கியுள்ள சசிகலா, நாம் அனைவரும் ஒன்றாக சந்தோசமாக செவ்வாய்கிழமை கிளம்புவோம் என்று கூறினார். இன்றைய தினம் சசிகலாவின் சந்தோசத்தை பறித்து விட்டது என்றே கூற வேண்டும். ஒருநாள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியவர் இனி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.