சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு இடம் மாறியது ஏன்?: வாஸ்து பார்க்கிறாரா ஜெயலலிதா?
பெங்களூர்: இதோ... அதோ என்று இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 27ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு தேதியும் தீர்ப்பு வழங்கும் இடமும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டற்கு இணங்க மாற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா கடந்த மாதம் அறிவித்தார்.
தமிழக மட்டுமல்லாது இந்தியாவே இந்த தீர்ப்பினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 15ம் தேதி ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், நீதிபதியிடம், ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இடத்தை மாற்றுங்கள்
'என் மனுதாரர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அவருக்குப் பாதுகாப்பு வேண்டும். இந்த நீதிமன்ற வளாகத்தில் 96 நீதிமன்றங்கள் இருக்கின்றன. பல்லாயிரம் பேர் வருகிறார்கள், போகிறார்கள். இங்கு அவருக்குப் பாதுகாப்பாக இருக்காது. அதனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 2011-ல் தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூர் வந்தபோது பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனில்தான் நீதிமன்றம் நடைபெற்றது. அதேபோல பாதுகாப்பு கருதி இந்த முறையும் அங்கே நீதிமன்றத்தை மாற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று மனுவைக் கொடுத்தார்.
காந்திநகர் நீதிமன்றம்
'வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றம் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இது பெங்களூர் நகரின் மையப்பகுதியான மெஜஸ்டிக் அருகே காந்தி நகரில் இருக்கிறது. இந்த கோர்ட் வளாகத்துக்குள் சிட்டி சிவில் நீதிமன்றங்கள் 53, விரைவு நீதிமன்றங்கள் 15ம், சிறு நீதிமன்றங்கள் 19ம், புறநகர் நீதிமன்றங்கள் 9 என மொத்தம் 96 நீதிமன்றங்கள் இருக்கின்றன. 7 அடுக்கு மாடிகளைக் கொண்டது இந்த வளாகம்.
25,000 பேர் வரும் நீதிமன்றம்
இதில் 1500-க்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்களும், 4,000 முதல் 5,000 பேர் வரை வழக்கறிஞர்களும் இருக்கின்றனர். ஒரு நாளில் குறைந்தது 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். இதற்கு இரண்டே நுழைவாயில்கள்தான் இருக்கிறது. இந்த நீதிமன்ற வளாகத்தின் முதல் மாடியில் 37-வது நீதிமன்ற அறையில்தான் தனி நீதிமன்றம் செயல்படுகிறது.
நீதிமன்றத்தில் கலவரம்
இந்த சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு ஊழல் வழக்குக்காக 2012-ம் ஆண்டு வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுத்தார்கள். அதை அவரது வழக்கறிஞர்கள் தடுக்க, பத்திரிகையாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்குமான கலவரம் மூண்டது.
23 நாட்கள் ஸ்தம்பித்த நீதிமன்றம்
அதைத் தடுக்க வந்த காவல் துறையினரையும் தாக்க மும்முனைக் கலவரமாக வெடித்தது. இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. 23 நாட்கள் நீதிமன்றமே நடைபெறவில்லை. அன்றிலிருந்து இந்த நீதிமன்ற வளாகத்துக்குள் எந்தப் பத்திரிகையாளர்களும் வருவதில்லை. இந்தக் கலவரச் சம்பவத்தை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு
சொத்துக் குவிப்பு 313 விதிப்படி ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூர் வந்தபோது பாதுகாப்புக் கருதி 3 இடங்களை தேர்வு செய்தார்கள். பெங்களூர்- ஒசூர் இடையே ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்திபவன் அரங்கம், ஆனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றம், எலெக்ட்ரானிக் சிட்டி ஏரியாவில் உள்ள கூட்டுறவு சங்க கோர்ட் ஆகிய மூன்றும் அப்போது பரிசீலனை செய்யப்பட்டது. இதில் பரப்பன அக்ரஹாரம் தேர்வு செய்யப்பட்டது.
வடக்கு வாஸ்து
இதில் பரப்பன அக்ரஹாரம் இடத்தைத்தான் கேட்கிறது ஜெயலலிதா தரப்பு. மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஹெச்.ஏ.எல் விமான நிலையம் பெங்களூர் மெஜஸ்டிக்கில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சிறப்பு விமானத்தில் வந்து இங்குதான் ஜெயலலிதா இறங்க வேண்டும். ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ளது பரப்பன அக்ரஹாரம். அவ்வளவு தூரம் அவர் காரில் பயணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும் பரவாயில்லை, காந்தி நகர் நீதிமன்றம் மட்டும் வேண்டாம் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறாராம்.
கிழக்கு ராசியில்லையே
காந்தி நகரில் தற்போது செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தின் ஹாலின் வாசல் வடக்கு நோக்கியிருக்கிறது. நீதிபதி மேற்கு நோக்கி உட்கார்ந்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் கிழக்கு நோக்கி நிற்க வேண்டியிருக்கும். கிழக்கு நோக்கி நிற்பது ஜெயலலிதாவுக்கு ராசியில்லையாம்.
மீடியாவை தவிர்க்கலாம்...
ஜெயலலிதாவிற்கு வடக்குதான் சரியாக வரும் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால் காந்தி நகரை தவிர்க்க நினைக்கிறார்கள். காந்தி நகர் கோர்ட் ஆக இருக்கும்பட்சத்தில் மீடியா எளிதாக அவரை நெருங்கிவிடும். கிட்டத்தட்ட 30 படிக்கட்டுகள் ஏறும்போதும், இறங்கும்போதும் எளிதாக படம் எடுக்கலாம். பரப்பன அக்ரஹாரம் என்றால் மீடியா கண்ணில் படாமல் நீதிமன்றத்திற்குள் போகலாம் என்பதும் ஜெயலலிதாவின் கணக்கு என்கிறார்கள்.
மாறிய தீர்ப்பு தேதி
இதனிடையே நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பதில் 27ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாதுகாப்புக்கு 5000 போலீசார்
இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளதாகவும், இந்தப் பணியில் 5,000 போலீசார் ஈடுபட இருப்பதாகவும், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை அபிடவிட் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.