சொத்துக் குவிப்பு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேட்ட வக்கீல்..வரும் போது சொல்வோம்..நீதிபதி
சொத்துக் குவிப்பு தீர்ப்புகுறித்து தீர்ப்பு வரும் போது தெரிய வரும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை அணுகி கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேட்டார். அதற்கு நீதிபதிகள், தீர்ப்புவரும்போது சொல்வோம் என்று பதிலளித்துள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகள் அமித்தவ ராய், பி.சி. கோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் ஒரு வாரத்தில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
ஆனால் நீதிபதிகள் சொன்ன ஒரு வாரம் முடிந்து போய் விட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கறிஞர் தவே, பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு குறித்து நினைவூட்டிக் கேட்டார். அதற்கு நீதிபதி கோஷ் கூறுகையில், தீர்ப்பு வரும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.
அனேகமாக தீர்ப்பு நாளைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று மாலை 6. 30 மணிக்குத்தான் நாளைய வழக்குகள் பட்டியல் வெளியாகும். எனவே அப்போதுதான் நாளை தீர்ப்பு வருமா என்பதும் உறுதியாகும்.
இந்தத் தீர்ப்பைத்தான் சசிகலா பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்தத் தீர்ப்பைக் காரண் காட்டித்தான் தமிழக பொறுப்பு ஆளுநரும் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் உள்ளார். இந்த வழக்கைத்தான் தமிழக மக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.