ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்தபோதிலும் கூட, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றபோதிலும் ஜாமீன் வழங்குவது நீதிபதியின் உரிமை என்றவகையில் இந்த தீர்ப்பை நீதிபதி சந்திரசேகரா அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் அளிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதைப் போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க அவர் கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் மற்ற மனுதாரர்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சந்திரசேகரா தள்ளி வைத்தார்.
பிற்பகல் இரண்டரை மணியளவில் விசாரணை மீண்டும் தொடங்கியபோது ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை வைத்தார். அதைத் தொடர்ந்து பவானி சிங்கும் வாதிட்டார். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளிப்பதில்லை கர்நாடக அரசுத் தரப்புக்கு ஆட்சேபணை இல்லை என்று திடீர் பல்டி அடித்தார்.
இதனால் ஜாமீன் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படியே வெளியிலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாகவே தகவல்கள் பரவின. இதையடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு வெடிகளும் போட்டனர்.
இந் நிலையில் நீதிபதி சந்திரசேகரா தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தண்டனையையும் அபராத்தையும் நிறுத்தி வைக்கக் கோரியும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனால் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக ஜாமீன் மனுக்கள் தவிர, தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு, சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி வைப்பது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நான்கு பேரும் தாக்கல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா சார்பில் ராம்ஜேத்மலானி ஆஜரானார். அவரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் காரசாரமாக வாதிட்டனர். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட, பதிலுக்கு பவானி சிங்கும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மேற்கோள் காட்டி வாதிட்டார்.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான வாதம் மற்றும் பிரதிவாதம் 11.30 முதல் 12.30 வரை சுமார் 1 மணி நேரம் நடந்தது.
பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரனின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணை ஆரம்பமானது.
அப்போது கர்நாடக அரசு வழக்கறிஞரான பவானி சிங் திடீரென பல்டி அடித்தார். ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபணை இல்லை என்றார். இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்ற சூழல் நிலவியது. அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாகவே தகவலும் வெளியில் பரவிவிட்டது. அதிமுகவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், நீதிபதியின் தீர்ப்பு வெளியானது.
நீதிபதி தனது உத்தரவில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது, தண்டனையை நிறுத்தி வைக்கவும் முடியாது என்று அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் அளிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.