ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் எப்போது 'க்ளைமாக்ஸ்' தீர்ப்பு?
டெல்லி: சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு வழங்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக 1991-96-ம் ஆண்டு காலத்தில் பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
18 ஆண்டுகள் பல்வேறு இழுத்தடிப்புகளுடன் இவ்வழக்கு நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.

சர்ச்சை தீர்ப்பு
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் வெளிப்படையாகவே கணக்குப் பிழைகள் இருப்பதும் சுட்டிக்காட்டது.

சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
இதன் பின்னர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷய்ந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களள எடுத்து வைத்தனர்.

நீதிபதிகள் கேள்வி
அப்போது நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வாதாடினர். ஆனால் ஜெயலலிதா தரப்பிலோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்படவில்லை; கூடுதல் வருமானம் என்பது வங்கிகளில் கடனாகப் பெற்ற தொகைதான் என்கிற வாதத்தை முன் வைத்தது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பது தவறல்ல.. அந்த பணம் ஜெயலலிதாவுடையதுதானா? என உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஆகஸ்ட்டில் தீர்ப்பு?
இந்நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இத்தீர்ப்பு வழங்குவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications