மேகதாது பிரச்சனை: மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர்- அனைத்து கட்சி தலைவர்கள்
பெங்களூர்: மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் முதல்வர் சித்தராமையா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10 அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசினர். மேகதாதுவில் கர்நாடக அரசை அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் மோடியை வலியுறுத்தினர்.
இதையடுத்து கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் சித்தராமையா தலைமையில் மோடியை சந்தித்து அணை கட்ட அனுமதி அளிக்குமாறு ஏப்ரல் 30ம் தேதி டெல்லி சென்று கேட்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் இன்று டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசினர். மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். புதிய அணை கட்ட வேண்டிய அவசியத்தை அவர்கள் மோடிக்கு எடுத்துரைத்துள்ளனர்.
அப்போது சித்தராமையா மோடியிடம் மனு ஒன்றை அளித்தார். கர்நாடகத்தில் எங்கள் பகுதியில் தான் அணை கட்டுகிறோம். இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி கூறுகையில்,
அனைத்து கட்சி தலைவர்கள் மோடியை பார்ப்பது பயனற்றது. அதனால் நான் டெல்லி செல்லவில்லை என்றார்.
இதற்கிடையே அரசு எந்த ஒரு முடிவையும் தேவே கவுடாவின் குடும்பத்தாரை கேட்டு எடுக்க வேண்டிய தேவை இல்லை என்று கர்நாடக மாநில சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் டிபி ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.