லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்க சொன்ன எம்.எல்.ஏ 6 ஆண்டுகள் சஸ்பென்ட்: ஐ,ஜனதா தளம் அதிரடி!
பாட்னா: பீகார் அரசால் லஞ்சத்தை ஒழிக்க முடியாது எனில் அதை சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்று கூறிய ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. ராஜிவ் ரஞ்சன் 6 ஆண்டுகாலத்துக்கு அக் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்ப்ட்டுள்ளார்.
பீகார் மாநிலம் இஸ்லாம்பூர் தொகுதி ஆளும் கட்சி எம்.ல்.ஏ. ராஜிவ் ரஞ்சன். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதும் பின்னர் சரணாகதி அடைவதும் இவரது வழக்கம்.
அண்மையில் ஐக்கிய ஜனதா தளமும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். லாலு பிரசாத் யாதவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். பின்னர் அது ஓய்ந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜிவ் ரஞ்சன் அளித்த ஒரு பேட்டியில், பீகார் அரசால் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. அப்படியெனில் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கிவிடலாம். அதாவது தகவல் அறியும் உரிமை சட்டம் போல லஞ்சம் கொடுக்கும் உரிமை சட்டம் என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துவிடலாம்.
அடுத்த பீகார் மாநில சட்டசபை கூட்டத் தொடரில் நானே இதற்கான தனிநபர் மசோதாவை கொண்டுவரப் போகிறேன் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.
ராஜிவ் ரஞ்சனின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்யது. அப்போதே, ஐக்கிய ஜனதா தள கொறாடா சரவண் குமார், ஒவ்வொரு முறையும் ராஜிவ் ரஞ்சன் இப்படி பேசுகிறார்.நடவடிக்கை எடுக்கும் போது கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பம்மிவிடுகிறார். நிச்சயமாக இம்முறை நாங்கள் விட்டுவிடப் போவதில்லை என்று எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச்செயலர் தியாகி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராஜிவ் ரஞ்சனை கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு கட்சித் தலைவர் சரத் யாதவ் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறியுள்ளார்.