மளமளவென சரிந்த மண்.. கண்முன்னே புதைந்த கோயில்! உத்தராகண்ட் ஜோஷிமத் கொடூரம்.. அலறிய பயணிகள்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்பு பிரச்னை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் இவர்களின் வருகையை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில்தான் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தை கடந்து விட்டால் வெறும் மலைகள்தான். சொல்லப்போனால் இமயமலைக்கு செல்பவர்களுக்கு இது ஒரு என்ட்ரி பாயிண்ட் மாதிரி. இவ்வாறு இருக்கையில் இந்த இடத்தில் கடந்த சில நாட்களாக நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீடுகளில் விரிசல் விழத் தொடங்கியுள்ளன. தற்போது கோயில் ஒன்று மண்ணில் சரிந்து புதையுண்டுவிட்டது.
சுமார் 600க்கும் அதிகமான கட்டிடங்கள் விரிசல் விட்டுள்ளன. 40 குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறி நடுங்கும் குளிரிலும் வெட்டவெளியில் தங்கியுள்ளன. இவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று நகரத்தின் மேலும் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். தற்போது வரை மூவாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்பதிவு
இந்த பிரச்னை இத்துடன் நிற்கவில்லை. மாறாக இங்குள்ள வணிக நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது. இந்த நரகத்தின் பிரதான வருவாய் சுற்றுலாப்பயணிகள் மூலம்தான் கிடைக்கிறது. இந்நிலையில், தற்போது வரை சுமார் 550க்கும் அதிகமான வர்த்தக நிறுவன கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தங்கள் முன்பதிவை வேக வேகமாக ரத்து செய்து வருகின்றனர். ஜோஷிமத் நகரின் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்தலம்தான் 'ஆலி'. இங்கு ஆண்டு தோறும் சுற்றுலாப்பயணிகள் பனி சறுக்கு விளையாடுவதற்கு வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த நிலச்சரிவு சம்பவத்தால் அவர்களின் வருகை குறைந்திருக்கிறது.

உறைபனி
சுற்றுலாப்பயணிகளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஹோட்டல்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 35% அளவுக்கு முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மற்றொருபுறம் இங்கு ஏற்கெனவே இரண்டு வரங்களுக்கு முன்னர் வந்து சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றனர். அதாவது, இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,050மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. டிசம்பர், ஜனவரி காலகட்டம் இமயமலையின் உறைபனி காலமாகும். எனவே இந்த உறைபனியானது ஜோஷ்மத் நகரின் ஆலியிலும் இருக்கும்.

சுற்றுலாத்துறை
எனவே இங்கு பனிச்சறுக்கு விளையாட அதிக அளவில் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் பயணிகள் வருவார்கள். ஆனால் தற்போது ஜனவரி 8 தேதி ஆகியும் இன்னும் இங்கு உறைபனி தொடங்கவில்லை. எனவே இந்த பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது. இந்நிலையில் அரசு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்த வணிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மறுபுறம் வீட்டை இழந்த இந்நகரின் குடியிருப்புவாசிகள், தங்களுக்கு வேறு ஒரு இடத்தில் நிரந்தரமாக குடியிருப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காரணம்
இது குறித்து மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தின் முடிவில் மக்களுக்கு மாற்று பகுதியில் நிரந்தரமாக இடம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த நிலச்சரிவுக்கு மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நகரை ஒட்டியுள்ள நகர் பகுதியில் தற்போது 825 கி.மீ நீளத்திற்கு சார் தாம் நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications