'சாதாரணர்கள்'தான் இஸ்ரோவில் அதிகம்.. ஐஐடி, என்ஐடி குரூப்பைச் சேர்ந்தவர்கள் 2% பேர்தான்!
டெல்லி: இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவை ஒரு பார்வை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர்களில் 98 சதவீதம் பேர் சாதாரண பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் படித்த சாதாரணர்கள்தான். வெறும் 2 சதவீதம் பேர்தான் ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்.
ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்காக கொட்டப்படும் கோடானு கோடி பணமும், அதி நவீன வசதிகளும் நமது நாட்டுக்கு வெறும் 2 சதவீத அளவுக்கே பயன்படுகிறது வேதனையானது. மிச்சமுள்ள 98 சதவீதம் பேரும் படித்து முடித்தவுடன் வெளிநாடுகளுக்குப் போய் விடுகின்றனர். அல்லது நமது நாட்டுக்கு பயன்படும் வகையில் எதையும் செய்வதில்லை என்றே தெரிகிறது.
விண்வெளி ஆய்வுகளில் பல சாதனைகளை,வியக்கத்தக்க சாதனைகளைச் செய்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளில் 98 சதவீதம் பேர் சாதாரணர்கள் என்பது உண்மையிலேயே பெருமையானது, ஆச்சரியமானது.
இஸ்ரோவின் முக்கிய அங்கமாக முன்பு இருந்தவரான மு்ன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே கூட மிகச் சாதாரண பின்னணியைக் கொண்டவர்தான். அவர் ஐஐடியில் படித்தவர் இல்லை என்பது முக்கியமானது.
இஸ்ரோவை விரும்பாத ஐஐடி எலைட்கள்
ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் படித்து வெளியேறும் மாணவர்கள் இஸ்ரோ மட்டுமல்லாமல், ரயில்வே உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றுவதை விரும்புவதில்லையாம்.
டிரெண்டாகப் போய் விட்டது
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதுநிலை ஆலோசகரான வி. ஆதிமூர்த்தி கூறுகையில், இஸ்ரோவில் பணியாற்றுவதை ஐஐடி, என்ஐடிகளில் படித்து வருவோர் விரும்புவதில்லை. இது வருத்தத்திற்குரியது. இது டிரெண்ட் ஆக மாறி விட்டது என்றார்.
ரயில்வே வேலைக்கும் வருவதில்லை
இதேபோல ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கியத் துறைகளிலும் சேருவற்குக் கூட இவர்கள் வர விரும்புவதில்லையாம். இதையும் ஆதிமூர்த்தியே கூறுகிறார். இவர் கான்பூர் ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திறமையாளர்களுக்கே முதலுரிமை
இருப்பினும் யார் எங்கு படித்தவர்கள் என்பதை இஸ்ரோ பார்ப்பதில்லை. அதற்குத் தேவை திறமையாளர்கள் மட்டுமே. மேலும் சாதாரண பொறியியல் கல்லூரியில் படித்தவர்களையும், ஐஐடியில் படித்தவர்களையும் அது ஒரே மாதிரியாகத்தான் பார்க்கும். இருவரில் யார் திறமையானவரோ அவருக்கே வேலையம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐஎஸ்எஸ்டியில் ஆர்வம் அதிகரிப்பு
இதற்கிடையே திருவனந்தபுரத்தில் கடநத் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோவின், இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் படிக்கும் பலரும் இஸ்ரோவில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டுவதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
சாப்ட்வேர் ஆர்வத்தில் ஐஐடியன்கள்
அதேசமயம் ஐஐடி, என்ஐடியில் படிப்பவர்களில் பெருமளவிலானோர், அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய தகவல் தொழில்நுட்பத்துறைக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிலைமையை மாற்றும் மங்கள்யான்
ஆனால் மங்கள்யான் சாதனைக்குப் பின்னர் இஸ்ரோ மீதான ஐஐடி, என்ஐடி மாணவர்களின் எண்ணம் மாறும் என்ற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.