உத்தரகாண்ட் ஜனாதிபதி ஆட்சி விவகாரம்.. மத்திய பாஜக அரசை வெளுத்த நீதிபதி கே.எம். ஜோசப் - ப்ளாஷ்பேக்
உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து மத்திய அரசை விமர்சித்தவர்தான் நீதிபதி கே.எம். ஜோசப்.
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம். ஜோசப்பை மத்திய அரசு நியமிக்க மறுத்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உத்தரகாண்ட்டில் அவசரம் அவசரமாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய விவகாரத்தில் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கி ஜனாதிபதி ஆட்சியையே ரத்து செய்த கோபத்தில்தான் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மறுப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. இந்த அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் மகன் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அப்படியே பாஜகவுடன் இணைந்து கொண்டனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதேநேரத்தில் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க அம்மாநில ஆளுநர் கே.கே. பால் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி
2016 மார்ச் 28-ந் தேதி ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்க இருந்தார். ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாக மார்ச் 27-ந் தேதி திடீரென மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என கூறி ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் கே.கே. பால் பரிந்துரைத்தார். இதை மத்திய அரசும் ஏற்று உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அம்மாநில தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி விகே பிஸ்த் பெஞ்ச் விசாரித்து அதிரடியாக ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மத்திய அரசை சாடிய நீதிபதி ஜோசப்
அப்போது நீதிபதிகள் கே.எம். ஜோசப், பிஸ்த் ஆகியோர் மத்திய அரசை மிகவும் கடுமையாக விமர்சித்தனர். ,பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது ஜனநாயகத்தின் வேரையே வெட்டி சாய்ப்பது போல என்று சாடினர். மேலும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு விலக்கிக்கொண்டு, யாரோ ஒருவரை அரசு அமைக்க அனுமதித்தால் அது நீதியை பரிகாசம் செய்தது போலாகும் எனவும் கடுமையாக விமர்சித்தனர். அத்துடன் தங்களுக்கு கிடைக்கும் முழுமையான அதிகாரம் என்பது யாருடைய மனதை வேண்டுமானாலும் கெடுத்து விடும் எனவும் குட்டு வைத்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது எனவும் விமர்சித்தனர்.
பழிவாங்கும் மத்திய அரசு
இதனால் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு மேல்முறையீடு செய்து பார்த்தது. ஆனால் உச்சநீதிமன்றம் ஹரீஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டு சிறப்பு பார்வையாளர்களையும் நியமித்தது. அப்போது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இதனால் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த கோபத்தில்தான் கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்கிற கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது என கூறப்படுகிறது.