அடுத்த 24 - 36 மணி நேரத்தில்.. காபூலில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம்.. ஜாக்கிரதை: பிடன் எச்சரிக்கை
காபூல்: காபூல் விமான நிலையில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து 4 இடங்களில் மோசமான மனித குண்டு வெடித்தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் போருக்கு பின்பாக நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக அமெரிக்க படையினரை குறி வைத்து இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் 13 பேர் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர்..

மக்கள் மரணம்
மொத்தம் 169 பொது மக்கள் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர். ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. அதேபோல் பலியானவர்களில் கணிசமானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காபூல் தாக்குதல் மொத்தம் 4 இடங்களில் நடைபெற்றது. அதில் இரண்டு தாக்குதல்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே சில கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது.

கொடூரம்
மற்ற இரண்டு தாக்குதல்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் மற்றும் பரோன் ஹோட்டல் கேட் அருகே நிகழ்ந்துள்ளது.சரியாக வெளிநாட்டு மக்களையும், அமெரிக்க படைகளையும் குறி வைத்து இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. தாலிபான்களையும், அமெரிக்க படைகளையும் இந்த அமைப்பு எதிர்த்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவோம், உடனே அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்பே அமெரிக்க அதிபர் பிடனும், அமெரிக்க உளவுத்துறையும் இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி இப்படி ஒரு மோசமான தாக்குதலில் 160க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

மரணம்
இந்த நிலையில்தான் காபூல் விமான நிலையில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அமெரிக்க அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்டத்தகுந்த, நம்பகமான தகவல் வந்தததை அடுத்து எச்சரிக்கை. காபூலில் விமான நிலையத்தில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும்.

பிடன் எச்சரிக்கை
அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் இன்னொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது. உளவுத்தகவல்கள் மூலம் மீண்டும் மோசமான தாக்குதல்கள் நடக்கலாம் என்று கணித்து இருக்கிறோம். அங்கு கள நிலவரம் மிகவும் மோசமாக இருக்கிறது. முக்கியமான விமான நிலையத்திற்கு வெளியே நிற்கும் மக்கள், அமெரிக்க மக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும். யாரும் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்க கூடாது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், என்று அமெரிக்க அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமான தீவிரவாதி
முன்னதாக காபூல் விமான நிலைய தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா சார்பாக ஆப்கானிஸ்தானில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் டிரோன் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் நாங்கஹார் என்ற பகுதியில் டிரோன் அட்டாக் நடத்தப்பட்டது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பு இந்த பகுதியில்தான் இயங்கி வருகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட முக்கியமான தீவிரவாதியின் இருப்பிடம் கண்டறியப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பின் முக்கியமான தீவிரவாதி இதில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்
இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் என்பது ஐஎஸ் அமைப்பு ஈராக்கிலும், சிரியாவில் வளர்ச்சி கண்ட பின் அவர்களின் வழியை பின்பற்றி உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு அடுத்து முக்கியமான இயக்கமாக இது பார்க்கப்படுகிறது. தாலிபான்களை விட கொஞ்சம் மூர்க்கத்தனமான அமைப்பு ஆகும் இது. இவர்கள் தொடக்க காலத்தில் தாலிபான்களுடன் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால் இப்போது இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. காபூல் விமான நிலையத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் நடத்திய தாக்குதல் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல் மட்டும் கிடையாது இது தாலிபான் அமைப்பிற்கும் எதிரான தாக்குதல் என்று கருதப்படுகிறது.
Recommended Video

தொடரும்
காபூலில் மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடக்கலாம் என்று பிடன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அங்கு டிரோன் தாக்குதல்களை தொடர்வேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். நாங்கள் நடத்தியது கடைசி டிரோன் அட்டாக் கிடையாது. எங்களின் பதிலடி தொடரும். தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் டிரோன் அட்டாக் நடத்தப்படும். இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும். இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பில் எல்லோரையும் வேட்டையாடும் வரை, இந்த தாக்குதல்களை நடத்தியவர்களை தண்டிக்கும் வரை எங்களின் டிரோன் அட்டாக் தொடரும் என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications