6 சட்டை, 5 பேன்ட், ஒரே ஒரு ஜோடி ஷூ.. எப்படி வாழ்ந்திருக்கிறார் பாருங்கள் கலாம்!
டெல்லி: பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு மகா எளிமையான மனிதர் என்றால் நிச்சயம் கண்ணை மூடிக் கொண்டு கலாமை நோக்கி கையைக் காட்டலாம். அந்த அளவுக்கு எளிமையின் சிகரமாக விளங்கியுள்ளார் கலாம். அவர் இருந்த வீட்டில் ஏசி கிடையாது, ஃபிரிட்ஜ் கிடையாது என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
தனது மிக மிக எளிமையான வாழ்க்கையின் மூலமாக மக்கள் மனதில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் கலாம்.
இவர் போல ஒரு அரசியல்வாதி கூட இல்லையே என்று மக்களை தவிக்க வைத்து விட்டது கலாமின் வாழ்க்கை. சாதாரண கவுன்சிலர்கள் கூட இன்று போடும் ஆட்டத்தைப் பார்க்கும்போது கலாம் கடவுள் போல மக்கள் கண்களில் தெரிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
2500 புத்தகங்கள்
கலாமின் உடமைகள் என்று பார்த்தால் மலைக்க வைக்கும் அளவுக்கு மலை போல குவிந்திருக்கும் நூல்கள்தான் பிரதானமாக உள்ளன. அவரிடம் 2500 புத்தகங்கள் இருந்துள்ளன.
சட்டை பேன்ட் எத்தனை பாருங்கள்
கலாமிடம் ஒரே ஒரு கைக்கடிகாரம்தான் இருந்துள்ளது. சட்டை, பேன்ட் கணக்கெடுத்தால், 6 சட்டை, 5 பேன்ட், 3 சூட் இருந்துள்ளன.
ஒரு ஜோடி ஷூ மட்டுமே
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த கலாம் ஒரே ஒரு ஜோடி ஷூ மட்டுமே வைத்திருந்தார் என்பது உண்மையிலேயே அதிர்ச்சி தருகிறது, ஆச்சரியத்தை அதிகரிக்கிறது.
ஃபிரிட்ஜ் கிடையாது
கலாமிடம் சொந்தமாக ஃபிரிட்ஜ் கிடையாது. டிவி கிடையாது, கார் கிடையாது, ஏசி கூட கிடையாது. இப்படித்தான் இந்த மனிதர் கடந்த 50 வருடமாக பொது சேவையின்போது வாழ்ந்துள்ளார்.
வறுமை இல்லை.. ஆனால் சொகுசும் இல்லை
கலாம் வறுமையிலோ, காசு இல்லாமலோ கடைசி காலத்தைக் கழிக்கவில்லை. மாறாக சொகுசு, ஆடம்பரம் ஆகியவற்றின் நிழல் கூட தன்னை அண்ட விடாமல் மிக கவனமாக இருந்துள்ளார்.
ராயல்டி புண்ணியத்தால்
தான் எழுதிய நூல்களின் மூலம் கிடைத்த ராயல்டி தொகை மற்றும் தனது ஓய்வூதியம் ஆகியவற்றை வைத்தே குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற கடைசிக் காலத்தைக் கழித்துள்ளார் கலாம்.
கிப்ட் கூடவே கூடாது
தனது இத்தனை கால வாழ்க்கையில் யாரிடமும் கிப்ட் வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர் கலாம். ஒரு கிப்ட்டைக் கூட அவர் ஏற்றுக் கொண்டதில்லை. குடியரசுத் தலைவராக இருந்தபோது வந்த கிப்ட்டுகளைக் கூட அவர் தொட்டதில்லையாம். மாறாக அரசிடம் அவற்றை சேர்க்குமாறு கூறி விடுவாராம். பிரித்துக் கூட பார்க்க மாட்டாராம் பெரும்பாலும்.
புத்தகம் மட்டும் பிடிக்கும்
அதேசமயம், யாராவது புத்தகம் கொடுத்தால் சந்தோஷமா்க வாங்கிக் கொள்வாராம். சிலர் புத்தகம் போல பார்சல் செய்து கிப்ட் கொடுக்க முயற்சித்தபோதெல்லாம் பிரித்துக் காட்டச் சொல்லி நிராகரித்திருக்கிறாராம்.
ரேடியோ கேட்பதில் ஆர்வம்
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருந்தாலும் கலாமுக்கு பிடித்த விஷயம் ரேடியோ கேட்பது. கடைசி வரை விடாமல் ரேடியோ கேட்டுள்ளார் கலாம். அவரிடம் டிவி கிடையாது என்பதால் ரேடியோ நியூஸ்தான் அவருக்கும், வெளி உலகுக்குமான தொடர்பாக இருந்துள்ளது. அதை விட்டால் செய்தித் தாள்களைப் படிப்பார். டெல்லி பங்களாவில் இருந்த டிவியை அவர் பார்த்ததே இல்லையாம். அதை ஊழியர்களுக்காக கொடுத்து விட்டாராம் கலாம்.
அண்ணன் மீது அதிக பாசம்
99 வயதான தனது அண்ணன் மீது அதிக பாசம் வைத்திருந்தார் கலாம். அவரது 100வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்.
சோலார் பேனல் போட்டு மகிழ்ச்சி
ராமேஸ்வரத்தில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் சூரிய சக்தி மின்சாரக் கருவியைப் பொருத்திக் கொடுத்து அண்ணன் அதைப் பார்த்து அடைந்த மகிழ்ச்சியை கடைசி வரை பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாராம் கலாம்.
போன் பேசாமல் இருக்க மாட்டார்
ஏதாவது முக்கியமாக உரையாற்றப் போவதாக இருந்தால் முன்னதாக தனது அண்ணனுக்கு போன் செய்து பேசி விட்டுப் போவாராம் கலாம். அப்படி முடியாவிட்டால் வந்த பிறகு தவறாமல் பேசி விடுவாராம். ஷில்லாங் கிளம்புவதற்கு முன்பும் கூட ஒரு நாளைக்கு முன்னதாக அண்ணனிடம் பேசினாராம் கலாம்.
எழுதித் தீராது சார் உங்களைப் பற்றி.