சொத்துப் பிரச்சினை... பெண்ணுக்கு மொட்டைப் போட்டு ஊர்வலம்- 2 பேர் கைது
தம்லுக்: மேற்கு வங்க கிராமமொன்றில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக பெண் ஒருவர் மொட்டை போட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள கிழக்கு மிதுனபுரியை மாவட்டம் கோவிந்தாப்பூர் கிராமத்தில் பஞ்சாயத்துக்காரர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் முன்னிலையில் சொத்துப் பிரச்சினை ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கை விசாரித்த பஞ்சாயத்துக்காரர்கள், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் தலையை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி உயர் போலீஸ் அதிகாரி ஹால்டியா அமிதவா ராய் என்பவர் கூறுகையில், ‘பஞ்சாயத்துக் காரர்களின் உத்தரவின் படி கிராமத்தின் வீதிகளில் அப்பெண் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டுள்ளார். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவிந்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.