இந்தியாவுக்குள் ஒடுக்குமுறைகளில் இருந்து தான் சுதந்திரம் கோருகிறோம்... 'ஜேஎன்யூ' கன்னையா கர்ஜனை
டெல்லி: நாங்கள் இந்தியாவுக்குள் அனைத்து ஒடுக்குமுறைகளில் இருந்துதான் விடுதலை கோருகிறோமே தவிர இந்தியாவை விட்டு போவதற்காக அல்ல என்று சிறையில் இருந்து விடுதலையான டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது என்ற குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த மாதம் அப்சல் குருவுக்கு நீதி கோரி அவர் தூக்கிலிடப்பட்ட நாளில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். ஆனால் இந்துத்துவா அமைப்பினரோ, இந்தியாவுக்கு எதிராக; பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக புகார் தந்தது.
இதனைத் தொடர்ந்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கன்னையாகுமார் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட போது இந்துத்துவாவாதிகள் அவரைத் தாக்கினர்.
பின்னர் கன்னையாகுமார் முழக்கங்கள் எழுப்பிய வீடியோவில் "தேசதுரோக முழக்கங்களை" சில ஊடகங்கள் சேர்த்து வெளியிட்டிருந்தது அம்பலமானது. இந்நிலையில் கன்னையாகுமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார் கன்னையாகுமார்.
விடுதலையான கன்னையாகுமார், தம் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டு கிஞ்சித்தும் தளராத ஒரு போராளியாக மாணவர்களிடையே நேற்று உரையாற்றினார். ஜேஎன்யூ மாணவர்கள் மத்தியில் கன்னையாகுமார் உரையாற்றியதாவது:
நாங்கள் இந்தியாவுக்குள்தான் சுதந்திரம் கேட்கிறோம்.... இந்தியாவை விட்டு போவதற்காக சுதந்திரம் கேட்கவில்லை.
ஒடுக்குமுறைகள், வறுமை, ஏழ்மை, ஊழல், பெண்கள்- சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுதலை வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பவில்லையா?
நாம் நம்மை ஒடுக்குகிற அனைத்துக்கும் எதிராக போராட வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார விடுதலை கோருகிற கன்னையாக்கள், ரோஹித் வெமுலாக்களின் குரல்களை வல்லரசாக விரும்புகிற இந்திய அரசு செவிகொடுத்து கேட்க வேண்டும்...
எங்களைப் போன்ற இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டுவதையோ சிறையிலடைப்பதையோ கைவிடுங்கள்... ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை கோருகிற எங்கள் மீது தேசதுரோக சட்டம் பாயுமேயானால் சிறை செல்ல தயாராக இருக்கிறோம்..
எங்களை எதிர்க்கிற ஏபிவிபி தோழர்கள் எமக்கு எதிரிகள் அல்ல... ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியமான ஒன்று... ஆகையால் ஏபிவிபியினரை விவாதத்துக்கு அழைக்கிறேன். வாருங்கள் விவாதிப்போம்...
அநீதிக்கு எதிரான ஜேஎன்யூ மாணவர்கள் குரலை நரேந்திர மோடி அரசு நசுக்க நினைக்கிறது... ஆனால் அதில் ஒருநாளும் அவர்களால் வெல்ல முடியாது.
இவ்வாறு கன்னையாகுமார் பேசினார்.