நெருங்கும் கர்நாடகா சட்டசபை தேர்தல்... மீண்டும் ஒலிக்கும் கன்னடர்களுக்கான இடஒதுக்கீடு முழக்கம்!
கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க கோரும் முழக்கம் மீண்டும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் கன்னடர்களே வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முழக்கம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் 2008, 2013 சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக மொழி அடிப்படையிலான முழக்கங்களை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அதேபோல் 2018 தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் கன்னட அமைப்புகள் களத்தில் குதித்துள்ளன.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கே 100% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சனிக்கிழமையன்று கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பு பேரணி நடத்தியது. இதே அமைப்பினர்தன் மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி இந்தி எழுத்துகளை அழித்தனர்.
85% வேலைவாய்ப்பு
தற்போது அரசு மற்றும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி இந்த அமைப்பினர் களத்தில் குதித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண் கவுடா, மத்திய- மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னட மொழி பேசும் மக்களுக்கே 85% வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை என்கிறார்.
இடஒதுக்கீடு பரிந்துரை
1980களில் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது சரோஜினி மகிஷி அறிக்கையானது, கன்னட மொழி பேசுவோருக்கான இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை என்கிறார நாராயண் கவுடா.
கன்னடருக்கே முன்னுரிமை
இந்த அமைப்பின் ஐடி விங்கை சேர்ந்த அருண் ஜவஹல் கூறுகையில், கர்நாடகாவில் வேலைவாய்ப்பு என்பது பிற மாநிலத்தவருக்குத்தான் போகிறது. கர்நாடகா மாநில மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்கிற கொள்கை எதுவும் அரசிடம் இல்லாததுதான் இதற்கு காரணம்.
ஆங்கிலத்தை நம்பி
மத்திய அரசுப் பணிகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெறுகின்றன. இந்தி பேசும் மக்கள் தங்களது தாய்மொழியில் தேர்வுகளை எழுதுகிற போது கன்னடர்கள் ஏன் ஆங்கில மொழியை சார்ந்து இருக்க வேண்டும்? என்றார். கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்வைத்து தீவிரம் அடையும் இந்த போராட்டங்கள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது விரைவில் தெரிய வரும்.