காவிரி.. கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமனை மாற்ற பாஜக வலியுறுத்தல்
பெங்களூர்: அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கும் தினமும் 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் சித்தராமையா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை பெங்களூரில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி, பாஜகவின் எம்.பி., ஷோபா கரந்தலாஜே, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் ஷோபா கரந்தலாஜே ஆகியோர், கர்நாடக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிவரும் மூத்த வழக்கறிஞர் நாரிமனை நீக்கிவிட்டு வேறு வழக்கறிஞரை நியமிக்க அரசை வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர்கள் தெரிவித்தனர். நாரிமன் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில் தோல்வியை தழுவி வருவதாலும், நேற்றைய வாதத்தின்போது பாதியிலேயே அவர் வாதிடுவதை நிறுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டி, நாரிமனை நீக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஷோபா கரந்தலாஜே நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார் என்பதே பாஜக கருத்து என்றார்.