கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக 2 பேரிடம் விசாரணை- சித்தராமையா: விளக்கம் கேட்டது மத்திய அரசு!
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனிடையே இப்படுகொலை தொடர்பாக கர்நாடகா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கேட்டிருக்கிறார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது:
கவுரி லங்கேஷ் படுகொலை கண்டனத்துக்குரியது. அண்மையில் அவரை நான் சந்தித்த போது கூட தமக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறவில்லை.
கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகளில் பயன்படுத்தப்பட்ட அதேபோன்ற ஆயுதமே கவுரி லங்கேஷ் கொலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவுரி லங்கேஷின் ஃபேஸ்புக் பக்கத்தில் மிரட்டல் விடுத்திருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு முடிவு செய்வோம். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இதனிடையே கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக கர்நாடகா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கேட்டுள்ளார். கர்நாடகா உள்துறை செயலாளர் பதிலளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.