கர்நாடக தேர்தல்: 35 சுற்றுப்பயணம்.. 10 நாள்.. பாஜகவின் பிரச்சார பீரங்கியாகும் யோகி ஆதித்யநாத்
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடக வர உள்ளார்.
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடகா வர உள்ளார். இந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக பாஜக முக்கியமாக நம்பி இருக்கும் நபர் யோகிதான் என்று கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக இதுவரை பாஜக, காங்கிரஸ் போன்ற எல்லா கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து, வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டது. பாஜக இதற்காக, அந்த கட்சியின் தேசிய முகங்களை களமிறக்க இருக்கிறது.
அதில் முக்கியமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெற இருக்கிறார். கர்நாடக தேர்தலில் பிரச்சாரத்திற்காக பாஜக முக்கியமாக நம்பி இருக்கும் நபர் யோகிதான் என்று கூறப்படுகிறது. அவர் வரும் மே 3ம் தேதி கர்நாடக வர இருக்கிறார். 7-10 நாள் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மொத்தமாக 35 சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். 200 தொகுதிகள் வரை இதில் அவர் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் களமிறக்குவதற்கு பின் பாஜக முக்கியமான திட்டம் ஒன்றும் வைத்துள்ளது.
லிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் கொடுத்த காரணத்தால் அவர்களின் வாக்கு காங்கிரசிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காக யோகி வருகிறார். அவருக்கு நிறைய இந்து குருக்களையும், லிங்காயத்து தலைவர்களையும் தெரியும் என்பதால், அவர் வந்து பிரச்சாரம் செய்தால் இந்த வாக்குகளை பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் பிரச்சாரம் செய்யும் போது, தினமும் அவருடன் இன்னொரு பாஜக தேசிய தலைவரும் சேர்ந்து கொள்வார். அமித் ஷா, மோடி ஆகியோரும் இவருடன் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.