சிறை அதிகாரிக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகம் முடிவு
சிறை அதிகாரிக்கு சசிகலா ரூ2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கு சொகுசாக இருக்க சிறை அதிகாரிக்கு ரூ2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா தகவலை வெளியிட்டார்.
அத்துடன் சிறையைவிட்டு வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு சசிகலா திரும்பும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக ஓய்வுபெற்ற அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையிலும் சசிகலாவுக்கு சிறையில் தனி சமையல் அறை இருந்தது உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி சசிகலா லஞ்சம் கொடுத்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஐ.ஜி. ரூபா, ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரிக்க வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து சசிகலா கொடுத்த ரூ.2 கோடி லஞ்சம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.