கர்நாடகா லாட்டரி ஊழல்- மார்ட்டின் நிறுவனத்தின் ரூ.122 கோடி சொத்துக்கள் முடக்கம்
டெல்லி: கர்நாடகாவில் நடைபெற்ற லாட்டரி ஊழல் வழக்கில், மார்ட்டின் நிறுவனத்திற்கு சொந்தமான ரூபாய் 122 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய அமலாக்கத்துறை.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் லாட்டரி விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல், அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை, "எஸ்.மார்ட்டின் மற்றும் என்.ஜெயமுருகன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் கோவை நகரில் உள்ள டாய்சன் லேண்ட் அண்ட் டெவலப்மெண்ட், சார்லஸ் ரியால்டர்ஸ், மார்ட்டின் மல்டி புரொஜெக்ட்ஸ், டாய்சன் லக்சுரி வில்லாஸ் ஆகிய 4 நிறுவனங்களும் லாட்டரி ஊழலில் தொடர்புடைய மார்ட்டினுக்கு சொந்தமானவை என்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.
மேலும், அமலாக்கத் துறையின் விசாரணையில் இவை அனைத்துமே லாட்டரி ஊழல் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனால், இந்த 4 நிறுவனங்களின் ரூபாய் 122 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் முடக்கி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications