விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்தை தூங்க விடவில்லை... அபிஷேக் மானு சிங்வி புகார்!
சிபிஐ விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்தை தூங்க விடவில்லை என்றும் இதனால் அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் அபிஷேக் மானு சிங்வி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் உள்ள கார்த்தி சிதம்பரத்தை வெளிச்சமான விளக்குகளுக்கு கீழேயே வைத்திருந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தியின் வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சிறப்பு நீதிபதி சுனில் ரானா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தியின் சிபிஐ காவல் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் சிங்வி, கார்த்தி சிதம்பரம் அதிகாலை 2.30 மணி ஆன பிறகும் கூட அதிகாரிகள் தூங்க விடுவதில்லை. இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிங்வி குற்றச்சாட்டு
ஒரு நாள் இரவு கார்த்தி ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 4 காவலர்கள் இருந்துள்ளனர். கார்த்தி விழித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காவலர்கள் பேசிக் கொண்டும், சீட்டாட்டம் விளையாடிக்கொண்டும் இருந்துள்ளனர் என்றும் சிங்வி கூறினார்.

சிபிஐ தரப்பு மறுப்பு
இதனை மறுத்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தசர் மேத்தா, விசாரணை அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை என்றார். தான் ஒவ்வொரு முறை கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த போதும், அவர் எப்படி இருக்கிறார் என்பதை கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

வீட்டு சாப்பாடை அனுமதிக்க வேண்டும்
அபிஷேக் சிங்வி கார்த்தி சிதம்பரத்தின் மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மார்ச் 8ம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ரத்த அழுத்தமானது 150/100 என்ற அளவில் இருந்ததை குறிப்பிட்டு சொன்னார். மேலும் கார்த்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சிங்வி கேட்டுக் கொண்டார்.

சிபிஐ முடிவு செய்யலாம்
இதற்கு வீட்டு உணவை கார்த்திக்கு அளிப்பது பற்றி சிபிஐ அதிகாரிகள் முடிவுக்கே விட்டுவிடுவதாக நீதிபதி தெரிவித்துதவிட்டார். கார்த்தி சிதம்பரத்திற்கு வீட்டு உணவை வழங்குவதில் அதிகாரிகளுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் தாராளமாக உணவை அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications