கத்துவா சிறுமி கொலை வழக்கு... உண்மை கண்டறியும் சோதனை செய்ய குற்றவாளி சஞ்சிராம் கோரிக்கை!
கத்துவா சிறுமி கொடூர கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று குற்றவாளி சஞ்சிராம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கத்துவா : காஷ்மீர் சிறுமி பலாத்காரம் மற்றும் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாவட்ட நீதிபதியிடம் தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று குற்றவாளி சஞ்சிராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது முஸ்லிம் சிறுமி 8 பேரால் கோவிலில் அடைத்துவைத்து வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் ஒரு குற்றவாளி சிறார் என்பதால் அவன் மட்டும் சிறார் நிலையில் அடைக்கப்பட்டுள்ளான். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மற்ற 7 குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிக்கை நகலை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது.
குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் மைனாரிட்டி முஸ்லிம் நாடோடி மக்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்டே சிறுமியின் படுகொலை அரங்கேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தேவிஸ்தான் கோவிலின் நிர்வாகி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிபதிகள் முன்னர் பேசிய முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்துதுறை அதிகாரியான 60 வயது சஞ்சிராம், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இந்தக் கொலையின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் வழக்கு விசாரணையானது ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறுமி வழக்கை சண்டிகருக்கு மாற்றக்கோரியும், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சிறுமியின் தந்தை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று பிற்பகலில் விசாரணை நடத்தியது.
சிறுமியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதாடினார். காஷ்மீர் போலீசார் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நபர்களையும் சான்றுகளிலும், விஞ்ஞான அடிப்படையிலும் கைது செய்தனர். வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் பட்சத்தில் சிபிஐக்கு மாற்றலாம் என்றும் அவர் வாதாடினார். வழக்கு விசாரணையின் போது கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கும் உரிய பாதுகாப்பு தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோருவது குறித்த ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.