கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்காத விவகாரம்... மன்னிப்புக் கோரினார் பினராயி விஜயன்
கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காத விஷயத்தில், பகிரங்க மன்னிப்புக்கோரினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய தமிழருக்கு உரிய சிகிச்சை வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், பரிதாபமாக அவர் உயிரழந்தார். தமிழகத்தில் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

முருகன் ஒரு வேறு மாநில கூலித் தொழிலாளி என்றும், அவரிடம் பணம் இல்லை என்றும், உறவினர்கள் இல்லை என்றும் காரணம் தெரிவித்த மருத்துவர்கள் சிகிச்சையளிக்கவில்லை. உரிய சிகிச்சையின்றி, 7 மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடிப்பு செய்த நிலையில், முருகன், உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
" இப்படிச் செய்ததன் மூலமாக, மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம்," என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications