பக்ரீத் விற்பனைக்கு வாங்கிய மொத்த துணிகளையும்.. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கொடுத்த வியாபாரி
கொச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் செய்வதற்காக வாங்கி வந்து துணிகளை வியாபாரி ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக அதை இலவசமாக வழங்கியுள்ளார்.
கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போது பெரிதாக மழை இல்லை. ஏன் ஜூலை மாதம் கூட பெரிதாக மழை இல்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை இரண்டாவது ரவுண்டில் கேரளாவை மிகஉக்கிரமாக தாக்கியுள்ளது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் மிகமிக கனமழை பெய்தது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை கேரளாவில் 72 பேர் உயிரிழந்ததுள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது வயநாடு மாவட்டம் தான். அங்கு தான் ஏரளானமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.
இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். பக்ரீத் பண்டியையும் அவர்களால் கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வியாபாரி நவ்ஷத் என்பவர் பக்ரீத் வியாபாரத்துக்காக உடைகளை வாங்கி வந்திருந்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் வாங்கிய அனைத்து உடைகளையும் இலவசமாக வழங்கியுள்ளார். எர்ணாகுளத்தல் உள்ள மாட்டச்சேரியில் கடை வைத்திருக்கும் நவுஷத் மக்களுக்காக உடைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த உடைகளை நடிகர் ராஜேஷ் சர்மா தலைமையிலான தன்னார்வ குழுவினர் வாங்கி சென்று வெள்ளத்தால் பாதித்த மலபார் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி நவுஷத் கூறும்போது, கேரளாவில், கடந்த முறை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இதை நான் செய்தேன். இப்போதும் செய்கிறேன். இவை அனைத்தும் எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன். எனக்கு இதுவே மகிழ்ச்சி" இவ்வாறு கூறினார்.