கோவில்களில் ஆர்எஸ்எஸ் கூட்டங்கள் நடத்த கேரள அரசு அதிரடி தடை!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கோயில்களில் நடைபெற்று வரும் 5000 ஷாகாவிற்கு தடை விதிக்க ஆளும் இடதுசாரிகள் அரசு திட்டமிட்டுள்ளது. இது கேரள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஷாகாக்கள் நடைபெறும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு சுமார் 5000 ஷாகாக்கள் கோயில்களில் நடத்தப்படுகின்றன. இந்த ஷாகாக்கள் மூலம் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பலருக்கும் சட்டத்திற்கு விரேதமாக ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமைதியாக இருக்கும் கேரளா கலவர பூமியாக மாறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, ஆர்எஸ்எஸ் ஷாகாக்களுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு திட்டம் தீட்டி வருகிறது.
"கேரளாவில் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஷாகாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஷாகாக்கள் மூலம் கடுமையான ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, ஷாகாக்களுக்கு தடையை கொண்டு வர உறுதியான சட்டம் ஒன்று கொண்டு வர உள்ளோம்" என்று கோயில்கள் விவகாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் குமணன் ராஜசேகரன், இங்கு ஆளும் கம்யூனிஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சங்பரிவாரின் நடவடிக்கைகளை கேரளாவில் கட்டுப்படுத்த நினைக்கும் அவர்களின் எண்ணம் பலிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.