காதல் தோல்வி, மலை உச்சி! மரண விளிம்பில் இளம் பெண்! மின்சார கனவு பிரபுதேவா ஸ்டைலில் காப்பாற்றிய எஸ்.ஐ
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் வாழ்க்கையை வெறுத்து மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற 26 வயது இளம்பெண்ணை தனது சாமர்த்திய பேச்சால் எஸ்ஐ ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கே எம் சந்தோஷ். இவர் வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்தார்.

இளம்பெண் தற்கொலை
அப்போது ஒரு தகவல் வந்தது. அதாவது அடிமாலி அருகே குதிராளம் அருகே மலை உச்சியில் இளம்பெண் ஒருவர் இருப்பதாகவும், அவர் மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய தயாராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ கே எம் சந்தோஷ் மற்றும் ஏஎஸ்ஐ அப்பாஸ் உடன் நேரம் தாமதிக்காமல் உடனடியாக அந்த மலை உச்சிக்கு சென்றார்.

திருமணத்துக்கு மறுத்ததால்...
அங்கு பாறையின் ஓரத்தில் இளம்பெண் ஒருவர் அழுதபடி அமர்ந்து இருந்தார். அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். இளம்பெண்ணை அவர்கள் மீட்க சென்றால் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் பொதுமக்கள் யாரும் அவரை நெருங்கவில்லை. அதோடு காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சிப்பதும் தெரியவந்தது.

இளம்பெண்ணிடம் பேசி எஸ்ஐ
இந்நிலையில் தான் சாதுர்யமாக செயல்பட்டு இளம்பெண்ணை பத்திரமாக மீட்க எஸ்ஐ சந்தோஷ் முடிவு செய்தார். இதையடுத்து இளம்பெண் தற்கொலை செய்ய நின்ற பாறையின் அருகே அவர் நடந்து சென்றார். இளம்பெண்ணை விட கொஞ்சம் தொலைவில் இருந்தபடியே எஸ்ஐ சந்தோஷ், இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, ‛‛எனக்கும் 2 மகள்கள் உள்ளனர். உனது பிரச்சனைக்கு நான் தீர்வு அளிக்கிறேன்'' என பெற்ற மகளுக்கு அறிவுரை கூறுவது போல் பேசினார்.

தற்கொலை முடிவை கைவிட்ட இளம்பெண்
ஆனால் முதலில் அவரது பேச்சுக்கு இளம்பெண் செவிசாய்க்கவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு எஸ்ஐ சந்தோஷின் பேச்சை அவர் கேட்க தொடங்கினார். மேலும் தற்கொலை முடிவை கைவிட்டு அங்கிருந்து திரும்பினார். இதையடுத்து சந்தோஷ் அவரிடம் ஒரு மணிநேரம் பேசி அறிவுரை வழங்கினார். மேலும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதாகவும், பேசி தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை முடிவுக்கு வருந்துகிறேன். இனி இதுபோல் செய்யமாட்டேன் என உறுதியளித்தார்.

எஸ்ஐக்கு பாராட்டு
இதுபற்றி எஸ்ஐ சந்தோஷ் கூறியதாவது: ‛‛நான் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு வசிக்கும் மக்கள், இளம்பெண்ணின் உறவினர்கள் சுற்றி இருந்தனர். அவர்கள் காப்பாற்ற முயன்றபோது இளம்பெண் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதனால் அவர்கள் என்ன செய்வது என்ற யோசித்தபடி நின்றனர். நான் பேசினேன். 2 மகள்கள் எனக்கு இருப்பதாகவும், பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்தேன். முதலில் அவர் கண்டுக்கொள்ளவில்லை. பிறகு என்னை நம்பி தற்கொலை முடிவை கைவிட்டு திரும்பினார். மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார். இந்நிலையில் இளம்பெண்ணை எஸ்ஐ சந்தோஷ் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. எஸ்ஐ சந்தோஷை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications