மாணவியை நீண்ட நேரம் கட்டி பிடித்து சஸ்பென்ட் ஆன மாணவனை தேர்வு எழுத அனுமதித்தது கேரள பள்ளி
மாணவியை பாராட்டுவதற்காக நீண்ட நேரம் கட்டிப் பிடித்து சஸ்பென்ட் ஆன மாணவனை தேர்வு எழுத்த கேரள பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம்: மாணவியை பாராட்டுவதற்காக பள்ளியில் நீண்ட நேரமாக விடாமல் கட்டிப்பிடித்து நீக்கப்பட்ட மாணவனை தேர்வு எழுத கேரள பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புரிந்த சாதனையை பாராட்ட நினைத்தார். இதையடுத்து அந்த மாணவியை அவர் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளை கூறிக் கொண்டார்.
எனினும் மாணவியை காம நோக்கத்துடன் நீண்ட நேரம் மாணவன் கட்டிப்பிடித்ததாக புகார் கூறிய பள்ளி நிர்வாகம் அவரை கடந்த ஜூலை மாதம் முதல் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை
5 மாதங்களுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும் அபாயம் அந்த மாணவனுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தை நாட மாணவனின் பெற்றோர் முடிவு செய்தனர். அதேபோல் மாணவியையும் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
பள்ளி முடிவே இறுதி
கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் இரு மாணவர்களையும் பள்ளியில் மீண்டும் சேர்த்து கொள்ள உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, ஒழுங்கீன செயல்கள் தொடர்பான விவகாரத்தில் பள்ளி எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்தது.
சிபிஎஸ்இதான் முடிவெடுக்கும்
பள்ளியில் அத்தனை பேருக்கு முன்னால் மாணவியை அந்த மாணவன் கட்டிப்பிடித்த போது டீச்சர் அதட்டியதால் அவர் விடுவித்தார் என்று கூறிய பள்ளி நிர்வாகம் இந்த மாணவன் தேர்வு எழுதும் விஷயத்தில் சிபிஎஸ்இதான் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தது.
மாணவியும் படிப்பை தொடரலாம்
இந்நிலையில் அந்த மாணவனை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், மாணவர்களின் நலனுக்காக அந்த மாணவனை தேர்வு எழுத அனுமதிக்கிறோம். அதே போல் அந்த மாணவியும் தனது படிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
|
சசிதரூர் நன்றி
இந்த பிரச்சினையை தீர்த்து வைத்த காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலையிட்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தேர்வு எழுத அனுமதித்ததற்கு அவர் நன்றி கூறியுள்ளார்.